மேகதாது விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்!

மேகதாது விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்!

சேலம் மாவட்டம், ஓமலூரில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரியில் இருந்து தண்ணீரைப் பெற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது எனவும் குற்றம் சாட்டி இருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு இன்று தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் கூறும்விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில் அவர், ‘காவிரி டெல்டா விவசாயிகளின் நலனைக் கருதி இந்த ஆண்டு ஜூன் 12 அன்று குறுவை சாகுபடிக்காக முதலமைச்சரால் மேட்டூர் அணை திறக்கப்பட்டு, தொடர்ந்து தேவைக்கேற்ப நீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், குறுவை சாகுபடியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இவ்வாண்டு 61.09 கோடி ரூபாய் மதிப்பிலான குறுவை தொகுப்புத் திட்டத்தையும் முதல்வர் அறிவித்து உள்ளார். விவசாயம் செய்வதற்குத் தேவையான நீர் அனைவருக்கும் சீராகக் கிடைப்பதற்கு ஏதுவாக கால்வாய்கள் முன்கூட்டியே தூர் வாரப்பட்டு நீர்ப்பங்கீடு செய்யப்பட்டு வருகிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டுக்குக் கிடைக்கப்பெற வேண்டிய காவிரி நீரை பெறுவதற்கு தேவையான முயற்சிகளை அனைத்து மட்டங்களிலும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய நீரினை அளிக்குமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவரை தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், நீர்வளத்துறை, 16.6.2023 அன்று நடந்த 21ம் கூட்டத்தில் வலியுறுத்தினார். கர்நாடகாவிலிருந்து ஜூன் மாதத்தில் குறைவாக வழங்கப்பட்ட நீர் குறித்தும், ஜூன் 30 அன்று நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கவனத்துக்கு எடுத்துரைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், நீர்வளத்துறை, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவருக்கு ஜூலை 3 அன்று எழுதிய கடிதத்தில், குறைபாட்டை நிவர்த்திக்கவும், ஜூலை மாதத்தில் அட்டவணைப்படி கர்நாடகா நீர் அளிக்க அறிவுறுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

கர்நாடக அரசு அவ்வப்போது மேகதாது பிரச்னையை எழுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இது அரசியல் நிர்பந்தத்தினாலோ என்னவோ தெரியவில்லை. எவ்வாறு இருப்பினும் தமிழ்நாடு அரசு மேகதாது அணை கட்டுவதற்கு ஒருபோதும் அனுமதிக்காது. கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பதவி ஏற்றவுடன் மேகதாது அணை கட்டுவது குறித்து பேசிய செய்திக்கு உடனேயே நான் மறுப்புத் தெரிவித்திருந்தேன். அண்மையில், 30.6.2023 அன்று, கர்நாடக துணை முதல்வர் ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்தபோது, மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி குறித்து பேசியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இது வருந்தத்தக்கது. கர்நாடக அரசு உத்தேசித்துள்ள மேகதாது அணை திட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. இந்தத் திட்டம் குறித்து, ஏற்கெனவே தமிழ்நாடு முதலமைச்சர் 17.6.2021, 31.3.2022 மற்றும் 26.5.2022 ஆகிய நாட்களில் பாரதப் பிரதமரை நேரில் சந்தித்தபோது மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளார்.

நானும், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை 6.7.2021, 16.7.2021 மற்றும் 22.6.2022 ஆகிய நாட்களில் சந்தித்தபோதெல்லாம் இந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளேன். ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரும் தமிழ்நாட்டின் இசைவில்லாமல் மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படாது எனக் கூறியுள்ளார். இதற்கிடையே, தமிழ்நாடு அரசு இப்பிரச்னை குறித்து தொடர்ந்துள்ள வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. தவிர, மேகதாது அணை திட்டம் குறித்த பொருள் பற்றி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வலியுறுத்திய போதெல்லாம் தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, 10.02.2023, 11.04.2023 மற்றும் 16.06.2023 நாட்களில் நடைபெற்ற ஆணையத்தின் கூட்டங்களில் இப்பொருள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இத்திட்டம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, வலுவான வாதங்களை முன் வைத்து கர்நாடகாவின் அணை கட்டும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு முறியடிக்கும்.

தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும், காவிரி விவசாயப் பெருங்குடி மக்களின் நலன் கருதியும், இவ்வாண்டு விவசாயத்துக்கு தடையின்றி நீர் வழங்க தேவையான எல்லா நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்கும். மேகதாது அணை பிரச்னை குறித்தும் தக்க நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும் என்பது உறுதி. இந்தப் பிரச்னையில் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com