

தமிழ்நாட்டில் தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதே தனது இலக்கு என்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார். இதற்கான கட்டமைப்பு வசதிகளை அனைத்து மாவட்டங்களிலும் மேம்படுத்தி, மத்திய அரசு மற்றும் முதலமைச்சருடன் கலந்தாலோசித்து உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். விளையாட்டை இளைஞர்கள் மத்தியில் ஊக்குவிப்பதன் மூலம் போதைப் பழக்கத்தை ஒழிக்க முடியும் என்றும், கல்விக்கு இணையான முக்கியத்துவத்தை விளையாட்டுக்கும் அரசு வழங்கும் என்றும் கூறியிருந்தார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றவர் நேற்று பல்வேறு துறை அதிகாரிகளை சந்தித்தவர் இன்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து பேசியுள்ளார். குறிப்பாக தமிழ்நாட்டின் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான பல்வேறு முக்கிய கோரிக்கைகளையும் மத்திய அரசிடம் முன் வைத்திருக்கிறார்.
குறிப்பாக 2029 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், திருச்சி மாவட்டத்தில் 48 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கும் ஒலிம்பிக் அகாடமியில் தற்காப்புக் கலைகளுக்கு தேசிய முதன்மை நிலை மையம் அமைப்பது, நாகை மாவட்டத்தில் கடற்கரை விளையாட்டுக்கான தேசிய முதன்மை நிலை மையம் உருவாக்குவது தொடர்பாகவும் அமைச்சர் ஆதார் அர்ஜுனா கோரிக்கை வைத்துள்ளார்.
புதுக்கோட்டை, தூத்துக்குடி, விழுப்புரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரியில் செயற்கை ஓடுதளங்கள் தேவை. கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, ராணிப்பேட்டை, கடலூர் மாவட்டங்களில் பல்நோக்கு உள்ளரங்க விளையாட்டு மையங்கள் தேவை. அதேபோல கோவை மாவட்டத்திலும் சர்வதேச தரத்திலான அங்கீகாரம் பெற்ற உள்ளரங்கம் அமைப்பது மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். மேலும் ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட உலக அரங்குகளில் தமிழ்நாட்டு இளைஞர்களை தொடர்ந்து ஊக்குவிக்கக்கூடிய வகையில் அதன் இலக்கை அடைவதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக ஆதவ் அர்ஜுனா மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரிடம் தன்னுடைய கோரிக்கைகளை எடுத்து வைத்திருக்கிறார்.