

இன்று சென்னையில் தமிழக உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி.வெங்கட்ரமணன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது , அதில் தமிழகத்தில் நீண்ட காலமாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று வரை அது வழங்கப்படவில்லை. மிக நீண்ட காலமாக புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் நின்று போய் உள்ளது. தேர்தலுக்குப் பின்னர் கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தாலும் இன்று வரை கிடைக்கவில்லை, என்று ஊடகவியலாளர் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் பி. வெங்கட்ரமணன், " புதிய ரேஷன் கார்டுகளுக்கு தனியாக ஒரு சிஸ்டம் அலாட் செய்து உள்ளனர் , ஏற்கனவே பிரிண்ட் ஆன ரேஷன் கார்டுகளை விநியோகிக்கும் பணிகள் விரைவிலேயே தொடங்கும்" என்றார்.
அடுத்ததாக நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் வழங்கப்படாமல் உள்ளதாக இருக்கிறது. உண்மையில் எந்த எண்ணிக்கையில் அது வழங்கப்படாமல் இருக்கிறது என்று கூற முடியுமா? என்று கேட்கப்பட்டது. "இதுக்கு எண்ணிக்கை என்பது ஒவ்வொரு தொகுதிக்கும் , ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்த மாதிரி மாறுபடக்கூடியது. இது பற்றிய ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஒரு சில இடங்களில் ரேஷன் கார்டுகள் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றன. சில இடங்களில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாமல் பெண்டிங்கிலும் இருக்கின்றன. நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை உடனடியாக ஆய்வு செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தகுதியான பயனாளிகள் கண்டறியப்பட்டு, விரைவில் அவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும். ரேஷன் கார்டுகளை விநியோகிக்கும் பணிகள் துறை மூலமாக செயல்படுத்தப்படும்" என்றார்.
புதிய ரேஷன் கார்டுகளை விண்ணப்பிப்பதற்கு முகாம்கள் போன்று ஏதேனும் நடத்தப்படுமா? என்ற கேள்விக்கு, " ஏற்கனவே புதிய ரேஷன் கார்டுகள் வழங்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சிறப்பு முகாம்கள் ஏதேனும் நடத்தப்பட வேண்டும் என்றால், சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும். இப்போது அது தேவையில்லை" என்று வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார்.
புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தால், ஒரு மாதம் ,இரண்டு மாதம், ஆறு மாதம் தாண்டி, அதற்கான நேரம் போய்க் கொண்டே இருக்கிறது. என்ற கேள்விக்கு, " எல்லா வேலைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் இருக்கும். ஆறு மாத கால அளவில் எல்லாம் போகாது. குறிப்பிட்ட அவகாச காலத்திற்குள் அனைத்து வேலைகளையும் செய்து முடித்து விடுவார்கள். இப்போது எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. அதனால் விரைவிலேயே புதிய ரேஷன் கார்டுகள் கிடைக்குமென்று" வெங்கட்ரமணன் கூறியுள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சியில், உணவு பொருள் வழங்கல் துறையில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக டெண்டர்கள் வழங்கப்பட்டது. அப்போது 2000 கோடி வரை டெண்டர்களில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது. அடுத்து வந்த திமுக ஆட்சியிலும் அதே நிறுவனத்திற்கு மீண்டும் டெண்டர்கள் வழங்கப்பட்டது. தற்போதைய ஆட்சியிலாவது அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? இது போன்ற டெண்டர்கள் புதியவர்களுக்கு வழங்கப்படுமா? ஊடகவியலாளர்கள் கேள்வியாக எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் வெங்கட்ரமணன், " நீங்கள் கூறிய அனைத்தும் அனுமானத்தில் கூறப்பட்டவை. ஒருவேளை டென்டரில் இது போன்ற முறைகேடுகள் நடந்து இருந்தால், அவர்கள் அடுத்த டென்டர்களில் கலந்து கொள்ள இயலாது. நீங்கள் ஆன்லைனில் நேரடியாக பார்க்கலாம், இது ஓபன் டெண்டர் ஆகத்தான் விடப்படுகிறது.
விருப்பமுள்ளவர்கள் தாராளமாக டெண்டர்களில் கலந்து கொள்ளலாம், யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் என்பதையும் நீங்கள் காண முடியும். நீங்கள் சொன்ன அந்த ஊழல் நிறுவனம் இந்த முறை கலந்து கொள்ளவில்லை. ஒரு நிறுவனத்தின் மீது புகார் இருந்தால் அந்த நிறுவனம் மீண்டும் டெண்டர்களில் கலந்து கொள்ளவே முடியாது" என்று அமைச்சர் கூறினார்.