நாட்டின் பிரபல விப்ரோ நிறுவனம் தனது ஊழியர்கள் 300 பேரை நிலா வெளிச்சம் பார்த்ததாகக் காரணம் தெரிவித்து வேலைநீக்கம் செய்துள்ளது.
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, தன் நிறுவனத்தில் வேலை பார்த்த மென்பொறியாளர்கள் 300 பேரை மூன் லைட்டிங்கில் (நிலா வெளிச்சம்) ஈடுபட்டதாக காரணம் கூறி வேலையை விட்டு நீக்கியுள்ளது.
அது என்ன நிலா வெளிச்சம்? இதுகுறித்து பிரபல ஐ.டி நிறுவன ஊழியர் ஒருவர் தெரிவித்தாதாவது:
அதாவது ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் தம் பணி நேரம் முடிந்ததும், அந்த நிறுவனத்திற்கே தெரியாமல் மற்றொரு நிறுவனத்தில் பணியாற்றுவதுதான் மூன் லைட்டிங் என்று சொல்லப் படுகிறது.
ஐ.டி..துறையில் இப்போது அதிகம் புழங்கப்படும் வார்த்தை இதுவே! ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் பணியாற்றியபடி, கூடுதலாக மற்றொரு நிறுவனத்திலும் பகுதி நேர வேலை பார்ப்பதைத்தான் ‘மூன் லைட்டிங்’ என்கிறார்கள்.
அண்மைக்காலமாக இது அதிகரிக்கவே, அதிர்ந்து போன அந்த நிறுவனங்கள் தன் ஊழியர்கள் பகுதி நேர வேலை பார்ப்பதற்கு தடை போட்டன.
கொரோனா சமயத்தில் வீட்டிலிருந்தபடி வேலை பார்க்கும் வசதியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளனர் மென் பொறியாளர்கள்.. அந்த நேரத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சந்தித்தவர்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ள மூன்லைட்டை பிடித்துக்கொண்டு விட்டனர். இப்போது அதே விஷயம் பலரின் வேலைக்கு ஆப்பு வைத்து விட்டது.
-இவ்வாறு அந்த ஊழியர் தெரிவித்தார்.
இன்போசிஸ் நிறுவனம் ஏற்கனவே இதுகுறித்து தன் ஊழியர்களை எச்சரித்துள்ளது. இந்நிலையில் விப்ரோ நிறுவனம் தனது 300 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது.
எங்கள் நிறுவனத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு.. போட்டி நிறுவனத்துக்கும் வேலை பார்ப்பதை எப்படி ஏற்க முடியும்? என்று நடவடிக்கைக்கு விளக்கம் அளிக்கிறது விப்ரோ நிறுவனம்.