பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்...பக்தர்கள் “கோவிந்தா! கள்ளழகரே!” என முழக்கம்..!!

மதுரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கியதை லட்சக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா! கள்ளழகரே!” என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
Kallalagar enters Vaigai river
Kallalagar enters Vaigai riverimage credit-PolimerNews
Updated on

ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற திருவிழாவாக அழகர் தங்க குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அந்த திருவிழா வெகுவிமர்சையாக நடந்தேரியது.

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய அங்கமாக நடைபெறும் இந்த விழா, ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இலட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது. மதுரை அருகிலுள்ள அழகர்மலையில் அருள்பாலிக்கும் சுந்தரராஜ பெருமாள், பக்தர்களால் அன்புடன் கள்ளழகர் என்று அழைக்கப்படுகிறார். பெருமாள் மதுரைக்கு எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கும் தருணம் இந்த வைபவத்தின் உச்சகட்ட நிகழ்வாகக் கருதப்படுகிறது.

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் சைவ-வைணவ ஒற்றுமையைப் பறைசாற்றும் விழாவாகும்.

இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 19-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையான நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை 5.50 மணியளவில் பச்சைப்பட்டு உடுத்தி, தங்க ஆபரணங்கள், மலர் அலங்காரங்களுடன் கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு வைகை ஆற்றில் இறங்கினார். பெருமாள் ஆற்றில் இறங்கும் போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு, கரகோஷம் எழுப்பி மகிழ்ந்தனர்.

அங்கு கூடியிருந்த லட்சக்காணக்கான, அதாவது சுமார் 10 லட்சம் பக்தர்கள் அந்த கண்கொள்ள காட்சியை கண்டுகளித்தனர். கள்ளழகரைக் காண தமிழகம் மட்டுமில்லாமல், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து இருந்து குவிந்த பக்தர்களால் மதுரை திருவிழாக்கோலம் கொண்டு, ஸ்தம்பித்தது.

கள்ளழகர் வைபவம் பக்தி மட்டுமல்ல, சமூக ஒற்றுமையின் அடையாளமாகவும் திகழ்கிறது. மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பல சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

நிகழ்வின் போது கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், அசம்பாவிதங்களைத் தடுக்கவும் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.

logo
Kalki Online
kalkionline.com