ம.பி. தேர்தல்: 30 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு “நோ சீட்”

Madhya Pradesh CM Sivaraj singh Chawhan
Madhya Pradesh CM Sivaraj singh Chawhan
Updated on

த்திய பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை கட்சி மேலிடம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதுவரை நான்கு வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. ஐந்தாவது பட்டியலும் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட 30 எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் கிடைக்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் 17-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக சார்பில் இதுவரை 4 வேட்பாளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 136 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 94 தொகுதிகளுக்கான 5-வது வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக மத்திய பிரதேசஉள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், “5-வது வேட்பாளர் பட்டியல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும்" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறியதாவது:

ஐந்தாவது வேட்பாளர் பட்டியலில் சுமார் 25 முதல் 30 பாஜக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது. அவர்களின் தொகுதிகளில் புதியவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக யாரும் முன்நிறுத்தப்படவில்லை. இதன்படி வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் செளகானுக்கு பதிலாக வேறு நபர் முதல்வராக நியமிக்கப்படலாம்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் 31 சதவீதம் பேர் உயர் வகுப்பை சேர்ந்தவர்கள். இதர வேட்பாளர்களில் பிற்படுத்தப்பட்டோர் 29%, பழங்குடியினர் 22%, தாழ்த்தப்பட்டோர் 13 சதவீதம் பேர் உள்ளனர்.

கடந்த 1957 முதல் 1998-ம் ஆண்டுவரை மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது உயர் வகுப்பை சேர்ந்தவர்களே முதல்வராக பதவி வகித்தனர். பாஜக ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 3 பேர் முதல்வராக பதவி வகித்துள்ளனர். இதை தேர்தல் பிரசாரத்தின்போது மக்களிடம் எடுத்துரைப்போம் என்று பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.

மத்தியப் பிரதேசத்தில் தற்போது பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. பா.ஜ.க.விடமிருந்து ஆட்சியை மீட்க காங்கிரஸ் போராடி வருகிறது. இந்த நிலையில் எதிர்ப்பு அலையில் சிக்கி ஆட்சியை இழந்துவிடக்கூடாது என்பதற்காக பா.ஜ.க. மேலிடம் பல்வேறு உத்திகளைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர்கள் சிலரும், எம்.பி.க்கள் சிலரும் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com