

இந்தியாவின் முதல் மெல்லிசை சாலை(Musical Road / Melody Road) மும்பையில் உள்ள கடலோரச் சாலையில் நரிமண் பாயிண்ட் மற்றும் வொர்லி(Nariman Point to Worli) இடையே பிப்ரவரி 11, 2026 அன்று திறக்கப்பட்டுள்ளது. 500 மீட்டர் நீளமுள்ள சாலையில், 70-80 கிலோமீட்டர் வேகத்தில் வாகனங்கள் செல்லும்பொழுது ஆஸ்கார் விருது பெற்ற 'ஜெய் ஹோ'(Jai Ho) என்ற புகழ்பெற்ற பாடலை ஒலிக்கும் வகையில், ஹங்கேரிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறப்பு பள்ளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் மும்பையில் கடற்கரை சாலையில் ஒரு புதிய முயற்சியாக, இந்தியாவிலேயே முதல்முறையாக மெல்லிசை சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இசை சாலை உலகிலேயே 5வது சாலையாக விளங்குகிறது. இதனை நேற்று முதல்- மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஹங்கேரி தூதர் பரன் ஜாரி, சிவசேனா முன்னாள் எம்.பி. ராகுல் செவாலே, மாநகராட்சி கூடுதல் கமிஷனர் அவினாஷ் தக்னே உள்பட பலர் கலந்து கொண்டனர். முதல் மந்திரி பட்னாவிஸ் பேசும்பொழுது கடற்கரை சாலையில் உருவாக்கப்பட்ட இந்த இசைச் சாலை வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கும். ஹங்கேரிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த புதுமையான சாலை எதிர்காலத்தில் மேலும் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
'ஸ்லம்டாக் மில்லியனர்' திரைப்படத்தின் சின்னமான 'ஜெய் ஹோ' பாடலை, வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தில் கடந்து செல்லும்போது கேட்கும் படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது.ஹங்கேரிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாலை மேற்பரப்பில் குறிப்பிட்ட தூரத்தில் ரம்பிள் பட்டைகள் வைக்கப்பட்டு, வாகனங்கள் இந்த பட்டைகளை கடந்து செல்லும் பொழுது வாகன டயர்களுக்கும், சாலை மேற்பரப்பிற்கும் இடையிலான உராய்வு காரணமாக 'ஜெய் ஹோ' என்ற இசை ஒலி உருவாகிறது. இது வாகன ஓட்டிகளின் சலிப்பைத் தவிர்த்து, குறிப்பிட்ட வேக கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வைப்பதன் நோக்கமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் மணிக்கு எழுவது - எண்பது கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் பொழுது மட்டுமே இந்த இசையை தெளிவாக கேட்க முடியும்.
உலகின் ஒரு சில நாடுகளில் மட்டுமே இப்படிப்பட்ட மெல்லிசை சாலைகள் அமைந்துள்ளன. ஜப்பானில் முதன் முதலில் 2007 ஆம் ஆண்டு மெல்லிசை சாலைகள் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் ஹங்கேரி, தென்கொரியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் செயல்படுத்தப்பட்டது. இது இந்தியாவின் முதல் இசை சாலையாகும்.