

பாடையுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர் :
நெல்லையில் சுயேச்சை வேட்பாளர் தனது ஆதரவாளரை பிணம் போல் பாடையில் சுமந்து வந்து மனு தாக்கல் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை சட்டப்பேரவை தொகுதியில் கருஞ்சிறுத்தை மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் அதிசய பாண்டியன் போட்டியிடுகிறார்.
இவர் தனது ஆதரவாளரை பிணம் போல் படுக்க வைத்து அவருக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செய்து பாடையில் தூக்கி சுமந்தபடி ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பாடையுடன் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கும் காவலர்களுக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.கடைசியில் தன்னுடைய 4 ஆதரவாளர்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த பாடை ஊர்வலம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதேபோல் கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேரறிவாளன், டெபாசிட் தொகையை 10 ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களாக செலுத்தி கவனம் ஈர்த்துள்ளார்.
தமிழ்நாட்டில் தேர்தல் காலங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக வினோதமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்வது வழக்கம். பொதுவாக வேட்பாளர்கள் தேர்தல் ஆணைய விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். எனினும் தேர்தல் பரப்புரையை முன்னிறுத்தி தனித்துவமாக தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர்.
வேட்புமனு தாக்கல் செய்யும் சமயத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் பெரும்பாலும் சவப்பெட்டியில் படுத்துக்கொண்டு, கையில் விலங்கிட்டு, பணமாலை அணிந்து, விசித்திரமான ஆடைகள் அல்லது வேடமணிந்து வித்தியாசமான வாகனங்களில் வந்து தங்களது கவனத்தை ஈர்க்கின்றனர். இத்தகைய வினோதமான செயல்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், தேர்தல் முறைகேடுகள் அல்லது தங்களின் கொள்கைகளை வலியுறுத்துவதற்காகவும் செய்யப்படுகிறது.