சிறந்த சுற்றுலா கிராமம் விருதைப் பெற்ற ஊட்டியில் உள்ள உல்லாடா... வாங்க அதன் சிறப்பை தெரிஞ்சுக்கலாம்!
இந்தியாவின் தலைசிறந்த சுற்றுலா கிராமத்திற்கான விருதை ஊட்டி அமைந்துள்ள உல்லாடா கிராமம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டினுடைய மிக முக்கிய சுற்றுலாத் தளமாக ஊட்டி விளங்குகிறது. மலை, பனிப்பொழிவு, எப்போதுமே மிதமான வானிலை, இயற்கை சூழ் அழகு ஆகியவையே ஊட்டியை நோக்கி சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்ல காரணமாகும். இந்த நிலையில் ஊட்டியினுடைய முக்கியத்துவத்தை நாடு முழுவதும் கொண்டு செல்லும் விதமாக தற்போது ஊட்டிக்கு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்திய ஒன்றிய அரசின் சார்பில் இந்தியாவில் சிறந்த சுற்றுலா கிராமம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதற்கான பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இந்த அங்கீகாரத்தை பெறுவதற்காக நாடு முழுவதும் உள்ள 765 கிராமங்கள் விண்ணப்பித்திருந்தன. இதில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊட்டியில் உள்ள மலை கிராமமான உல்லாடா கிராமமும் ஒன்று.
ஒன்றிய அரசின் சிறந்த சுற்றுலா கிராமம் என்ற விருதை பெறுவதற்கு அந்த கிராமத்தினுடைய உள்கட்டமைப்பு, கலை, கலாச்சாரம், உணவு பழக்கம், பாதுகாப்பு, சுற்றுலாவுக்கு ஏற்ற சூழல் மற்றும் காவல் நிலையம், பள்ளிகள், மைதானங்கள், மருத்துவமனை, கோயில்கள், வீடுகள் ஆகியவை இருக்கவேண்டும். இவை அனைத்தையும் ஆய்வு செய்து சிறந்த சுற்றுலா கிராமம் தேர்வு செய்யப்படும்.
இந்த வகையில் இந்த ஆண்டு இந்தியா முழுவதும் போட்டியிட்ட கிராமங்களில் சிறந்த சுற்றுலா கிராமமாக நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள உல்லாடா கிராமம் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த கிராமத்தில் 795 மக்கள் வாழ்கின்றனர். மேலும் இது ஆசியாவின் மிகப்பெரிய பள்ளத்தாக்கான கேத்தி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த ஊட்டி, தற்போது இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலா தளமாக கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டியின் உல்லாடா கிராமத்தை நோக்கி படையெடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் அந்த கிராமத்தினுடைய பொருளாதாரமும் உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.