நீட் தேர்வு முடியும் வரை டெலிகிராம் செயலிக்கு தடை..!

தேர்வு முறைகேடு மற்றும் மோசடிக் கும்பல்களின் பணப் பறிப்பைத் தடுக்க மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!
நீட் மறுதேர்வு
நீட் மறுதேர்வுimage source:Digit
Updated on

இளநிலை நீட் மறு தேர்வு ஜூன் 22ஆம் தேதி நடக்கும் நிலையில் வினாத்தாள் கசிவதை தடுப்பதற்காக டெலிகிராம் செயலியை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் பொழுது வினாத்தாள் டெலிகிராம் செயலியில் கசிந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீட்(NEET) மறுதேர்வு வருகிற ஜுன் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வினாத்தாள் கசிவு மற்றும் மோசடிகளைத் தடுப்பதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22ஆம் தேதி வரை தற்காலிக தடை விதித்துள்ளது. தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் கும்பல்கள், டெலிகிராம் செயலியைப் பயன்படுத்தி போலியான வினாத்தாள்களைக் காட்டி மாணவர்களிடம் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தன. அதாவது சமூக விரோதிகள் சிலர், கசிந்த வினாத்தாள் தங்களிடம் இருப்பதாகக் கூறி மோசடி செய்து பணம் வசூலித்து வந்தனர். அதனால் தேர்வை எந்த பிரச்சனைகளும் இல்லாமல் நடத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இதைத் தடுக்கும் தேசிய தேர்வு முகமையின்(NTA) பரிந்துரையின் பேரில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

telegram
telegram

கடந்த மே 3 அன்று நடந்த நீட் தேர்வின் வினாத்தாள்கள் டெலிகிராமில் கசிந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, தற்பொழுது ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. பொது ஒழுங்கை பாதுகாக்கும் நலன் கருதியும், நீட் 2026 மறு தேர்வில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு ஏமாற்ற கும்பல்கள் இந்த தளத்தை திட்டமிட்டு பயன்படுத்துவதற்கு பதிலளிக்கும் விதமாகவும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நடவடிக்கையை வரவேற்பதாக கூறியதுடன், இது தேர்வு செயல்முறையின் நேர்மையை பாதுகாப்பதற்கான ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என்றும் தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.

ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ள நீட் மறுதேர்வு நேர்மையாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாணவர்களுக்கு உறுதியளித்திருந்தார். அனைத்து மாணவர்களும் நம்பிக்கையுடன் இருந்து, மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மாணவர்களுக்கு கூடுதலாக 15 நிமிடங்கள் அவகாசம் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். நீட் மறுதேர்வு நேர்மையாகவும், நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் மாணவர்களுக்கு உறுதி அளித்த படியே இப்பொழுது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வருகிற 21ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், 22ஆம் தேதி வரை டெலிகிராம் செயலிக்கு தடை அமலில் இருக்குமென்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன் பிரிவு 69Aவின் கீழ் மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே வெளியிட்ட டெலிகிராம் பதிவுகளை எடிட் செய்ய ஜூன் 30 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com