

தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வ தகவலின்படி, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு முடிவுகள் வருகிற ஜூலை 20ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் மறு தேர்வுக்கான ஸ்கோர் கார்டுகள் மற்றும் இறுதி விடைக்குறிப்பு ஆகியவை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும், வினாத்தாளில் தவறான கேள்விகளுக்கு மாற்றாக சரியான விருப்பங்களை எழுதிய மாணவர்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை(NTA) அறிவித்துள்ளது.
ஜூன் 21ஆம் தேதி நடைபெற்ற நீட் மறு தேர்வை 5,500 மையங்களில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினார்கள். தமிழகத்தில் 307 தேர்வு மையங்களில் 1.20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நீட் மறுதேர்வு எழுதினார்கள். நீட் மறு தேர்வு முடிவுகள் வருகிற 20ஆம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்த நீட் மறுத்தேர்வில் ஒரு கேள்வி தவறாக கேட்கப்பட்டதை ஒப்புக்கொண்ட தேசிய தேர்வு முகமை மற்றொரு கேள்விக்கு இரண்டு விடைகள் சரியானது. அந்த கேள்விக்கு இரண்டு விடைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்த மாணவர்களுக்கு நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமையின் விடைக்குறிப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நீட் மறு தேர்வில் தவறான 2 கேள்விகளுக்கு போனஸ் மார்க் வழங்கப்பட உள்ளது. கேள்வி எண் 26 மற்றும் 38 ஆகிய இரண்டிற்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன. இந்த இரண்டு கேள்விகளுமே இயற்பியல் பாடம் சார்ந்தவை.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது.எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படடு அதில் பெறப்படுகின்ற மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
அதன்படி 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 3ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு ஜூன் 21ஆம் தேதி நடைபெற்றது. தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்தது உறுதி செய்யப்பட்டதால், மே 3ம் தேதி நடைபெற்ற அந்த தேர்வை மத்திய அரசு ரத்து செய்ததுடன் வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்களையும் கைது செய்தது.
அத்துடன் நீட் தேர்வு மீண்டும் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி நீட் மறு தேர்வு ஜூன் 21ஆம் தேதி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.
நாடு முழுவதும் முக்கிய நகரங்களிலும், துபாய், அபுதாபி, தோகா, மஸ்கட், சிங்கப்பூர் போன்ற 14 வெளிநாடுகளிலும் நடந்த இத்தேர்வில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மறுதேர்வு எழுதினர்.
தமிழகத்தில் 307 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். சென்னையில் மட்டும் 43 மையங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில் நீட் மறு தேர்வு முடிவுகள் வருகின்ற 20ஆம் தேதி வெளியிட தேசிய தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளது.
மறுதேர்வு காரணமாக மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைமுறை தாமதமடையாது என்றும், முடிவுகள் வெளியானதும் கலந்தாய்வு திட்டமிட்டபடி தொடங்கும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியானவுடன் அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீடுகளுக்கான மருத்துவ கலந்தாய்வு (Counselling) செயல்முறை தொடங்கும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி இடங்களுக்கான சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த ஜூன் 29ம் தேதியில் இருந்து பெறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.