‘வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே நீட் வெற்றி சாத்தியம்’ பாமக நிறுவனர் ராமதாஸ்!

‘வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே நீட் வெற்றி சாத்தியம்’ பாமக நிறுவனர் ராமதாஸ்!
Updated on

டைபெற்று முடிந்த நடப்பு ஆண்டு நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் தேசிய அளவில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்று இருக்கிறார். அதுமட்டுமின்றி, தேசிய அளவில் நடைபெற்ற இந்த நீட் தேர்வில் முதல் பத்து இடங்களில் நான்கு இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர் பிரபஞ்சனுக்கு பாமக நிறுவனம் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “2023ம் ஆண்டுக்கான நீட் தேர்வில் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். தேசிய அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் நால்வர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களுக்கும் நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் முதலிடம் பிடித்திருக்கிறார்கள் என்பதாலேயே அத்தேர்வை நியாயப்படுத்த முடியாது. தனியார் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி பயிற்சி பெறும் அளவுக்கு வாய்ப்பும், வசதிகளும் உள்ளவர்களுக்கு மட்டுமே நீட் வெற்றி சாத்தியம். கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு நீட் வெற்றி இப்போதும் எட்டாக்கனிதான். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு எப்போது விலக்கு கிடைக்கிறதோ, அப்போதுதான் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி சாத்தியமாகும். அதுதான் சமூக நீதிக்கு நிலையான வெற்றியாக அமையும்” என்று பதிவு செய்திருக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com