

பிஎஃப் பணத்தை பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து, அது அங்கீகரிக்கப்பட்டு வங்கிக்கு வருவதற்கு சில நாட்கள் ஆகும். ஆனால் புதிய திட்டத்தின் படி நம் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட யுபிஐ பின்-ஐப் பயன்படுத்தி பணத்தை எடுக்க முடியும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் வைத்துக் கொண்டு மீதமுள்ள பணத்தை அவசர தேவைக்கு எடுக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இது தற்பொழுது நம் கணக்கில் உள்ள பணத்தை வங்கி மூலம் பெறும் வசதி கொண்டது. ஆனால் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நம்முடைய தொகையை வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட யு.பி.ஐ. மூலம் நேரடியாக மாற்றிக் கொள்ள முடியும். இதற்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்கு யு.பி.ஐ. பின் பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தத் தொகையை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட பிறகு, டிஜிட்டல் கட்டணமாகவோ, ஏ.டி.எம். மூலம் பணமாகவோ எடுத்துக் கொள்ள முடியும்.
வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் தங்களுடைய வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அறிமுகமாக உள்ளது. புதிய முறைப்படி பயனர்கள் தங்கள் கணக்கில் உள்ள தொகையில் 75% வரை யு.பி.ஐ./ஏடிஎம்(UPI/ATM) மூலம் நேரடியாக வங்கிக் கணக்கில் உடனுக்குடன் பெற முடியும். இதற்கு UAN(universal account number) மற்றும் ஆதார், வங்கிக் கணக்குகள் இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு இருக்க வேண்டும்.
இந்த UPI வசதியின் சேவையை மேம்படுத்துவதற்காக மற்றும் தொழில்நுட்ப குறைபாடுகளை போக்குவதற்காக சுமார் 100 மாதிரி கணக்குகள் மூலம் இ.பி.எப்.ஓ நிறுவனம் ஒத்திகை பார்த்து வருகிறது. தொழிலாளர் நலத்துறை உருவாக்கியுள்ள இந்த செயலியை ஏப்ரல் மாதம் மத்திய அரசு அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய முறை மூலம் நீண்ட நாட்கள் காத்திருக்காமல் உடனடியாக நம் பிஎப் பணத்தை யுபிஐ பின் மூலம் பெற முடியும்.