பாரிஸ் ஒலிம்பிக்கில் நேற்று நடந்த 50 மீ ஏர் ரைஃபில் துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய வீரர் சுவப்னில் குசாலே வெண்கல பதக்கம் வென்றார். இவர் புனே ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், அவருக்கு சிறப்பு பணி அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும் என மத்திய ரயில்வே பொது மேலாளர் ராம்கரன் யாதவ் அறிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில், நிலச்சரிவால் துண்டிக்கப்பட்ட சூரல்மலை - முண்டக்கை பாலத்திற்கு பதிலாக, 31 மணி நேரத்தில் 190 அடி நீளத்தில் தற்காலிகப் பாலம் அமைத்து இந்திய ராணுவ வீரர்கள் அசத்தியுள்ளனர். டெல்லி, மைசூரு, பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட இரும்பு தூண்களைக் கொண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இரவு பகலாக இந்திய ராணுவ வீரர்கள் அமைத்த பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் ரேசன் பொருட்களை பலர் வாங்காத நிலையில், "சிறப்பு பொது விநியோக திட்டப் பொருட்கள் முழுமையாக நகர்வு செய்யப்படாததால் கடந்த மாதம் வழங்கப்படவில்லை" என விளக்கம் அளித்து, "ரேசன் கடைகளில் ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாதவர்கள் இம்மாதம் பெற்றுக் கொள்ளலாம்" என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு எதிராக நடிகர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், "நாங்கள் கொண்டுவந்துள்ள தீர்மானத்தில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் நடிகர்களின் சம்பளத்தை குறைக்க சொல்லவில்லை. இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மற்ற சினிமா துறைகளில் இருப்பது போன்று பட வியாபாரத்தில் ஷாரிங் முறைக்கு தான் மாற கேட்கிறோம். நடிகர் சங்கம் பேச்சு வார்த்தைக்கு அழைத்தால் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்" என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி ராமசாமி கூறியுள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று துவங்குகிறது. இந்த ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா, விராட்கோலி களமிறங்குவதாக கூறப்படுகிறது. எனில், 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ஏற்பட்டுள்ளது.