உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஹத்ராஸ் என்ற இடத்தில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக இதுவரை 131 பேர் உயிரிழந்த நிலையில், அடுக்கடுக்காக குவியும் பிணங்களைப் பார்த்த காவலர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வார இறுதி நாட்களை முன்னிட்டு வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுகளில் சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 415 கூடுதல் பேருந்துகளும் சனிக்கிழமை 310 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக்கில் உள்ள லே பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.12 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. லேவில் 150 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதே போல் கர்நாடகா மற்றும் கேரளாவிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது அதிகபட்சமாக நீலகிரி, நாமக்கல், கோவை, மாவட்டங்களில் மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 19-ந்தேதி விஷ சாராயம் குடித்தவா்களில் 65 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சாராயம் விற்றதாக 21 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் 11 பேரை காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாா், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று 2-வது நாளாக இந்த விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில், கருணாபுரம், மாதவச்சோரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளை சோ்ந்தவா்கள் குடித்தது மெத்தனால் கலந்த சாராயம் அல்ல; மெத்தனால் கலந்த தண்ணீா் என்பது தெரியவந்துள்ளது.