650 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தற்போது தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தற்போது உள்ள நிலவரப்படி, தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 650 இடங்களில் 330-க்கும் அதிகமான இடங்களை வென்று முன்னிலையில் இருப்பதால் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்கப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் இடி மின்னலுடன் கன மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகமான காற்றுடன் மழை பெய்ய உள்ளதால், தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 170-வது படமான ‘வேட்டையன்’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வரும் 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகை சுருதிஹாசன் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடியில் வேலவன் ஹைபர் மார்க்கெட் வளாகத்தில் உள்ள கேஎஃப்சி உணவகத்தில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அதில், உணவு எண்ணெய்க்கு அனுமதி இல்லாத மெக்னீசயம் சிலிக்கேட் சிந்தடிக் என்ற உணவுச் சேர்மத்தினை பழைய உணவு எண்ணெயை தூய்மைப்படுத்த பயன்படுத்தியதாக கண்டறிந்துள்ளனர். 18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட் சிந்தடிகைக் கொண்டு தூய்மைப்படுத்தப்பட்ட 45 லிட்டர் பழைய உணவு எண்ணெய், முன்னதாகவே தயாரிக்கப்பட்டு, 12 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்த 56 கிலோ சிக்கன் ஆகிவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். அந்த உணவகத்தின் உரிமம் இடைக்காலமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2007 ஆம் ஆண்டுக்கு பின்னர் 17 ஆண்டுகள் கழித்து இந்திய அணி, டி20 உலக கோப்பையை இந்த ஆண்டு வென்றுள்ளது. தனி விமானம் மூலம் நேற்று டெல்லி வந்த இந்திய அணி வீரர்கள், மாலை 4 மணிக்கு டி20 உலக கோப்பையை ஏந்தி, மும்பை நரிமண் பாயிண்டில் இருந்து வான்கிடே மைதானம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட வெற்றி கொண்டாட்ட பேரணியை நடத்தியுள்ளனர். ரசிகர்கள் கடல் போல திரண்டு வீரர்களுக்கு உற்சாக வரவேற்புக் கொடுத்துள்ளனர். டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு, பிசிசிஐ சார்பில் 125 கோடி ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையும் வழங்கப்பட்டது.