650 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடந்து முடிந்தது. இத்தேர்தலில் உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகிய தமிழர்கள் போட்டியிட்டனர். இன்று தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், இலங்கையை பூர்வீகமாக கொண்ட உமா குமரன் என்ற தமிழ்ப்பெண் வெற்றி பெற்று எம்.பி, ஆகியுள்ளார். இவர், அந்நாட்டின் ஸ்டான்போர்ட் அண்ட் பவ் தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம், 'பிரிட்டன் பார்லிமென்டிற்கு தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழ் பெண்' என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இளநிலை நீட் தேர்வில் முறைக்கேடு நடந்ததை தொடர்ந்து முதுநிலை நீட்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11 ஆம் தேதி 2 ஷிப்டாக நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை இன்று அறிவித்துள்ளது.
சென்னை செம்மொழி பூங்காவில் 'ஊரும் உணவும்' என்ற பெயரில் புலம் பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழா இன்று முதல் வரும் 7ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இங்கு இடம்பெறுகின்றன. இந்த உணவு திருவிழாவிற்கு செல்லும் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைப் பெறவுள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து கலந்துரையாடினார். கடந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பி.வி.சிந்து உள்ளிட்ட சில வீரர்கள் வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாகவும் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டுள்ளனர்.