ரஷ்ய அதிபர் புடின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி நாளை (ஜூலை 08) மாஸ்கோ செல்ல உள்ளார். அங்கு இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்று, இரு நாட்டு உறவுகள், சர்வதேச மற்றும் பிராந்திய உறவுகள் குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
கர்நாடகாவில் கடந்த மாதத்தில் இருந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெரியவர்களுக்கு நிகராக குழந்தைகளையும் டெங்கு தாக்கி, பாதிப்பு எண்ணிக்கை 7,000த்தை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது. திடீரென அதிக காய்ச்சல், தலைவலி, கண்ணில் எரிச்சல், மூட்டு வலி, வாந்தி, குமட்டல், உடலில் வீக்கம் என ஆரம்பித்து நான்கு நாட்களில் உடலில் தடிப்புகள் ஏற்படுவது இந்த டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளாக இருக்கிறது.
பயணியரின் லக்கேஜ்களை அதிக எண்ணிக்கையில் தவற விடுவதில், 'ஏர் இந்தியா' விமான நிறுவனம் உலகளவில் முதலிடத்தில் இருப்பதாக, 'லக்கேஜ் லாசர்ஸ் டாட் காம்' நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம், பயணியர் தொலைத்த லக்கேஜ் எண்ணிக்கைகளின் அடிப்படையில் விமான நிறுவனங்களை வரிசைப்படுத்தியத்தில், ஏர் இந்தியா நிறுவனம், கடந்த மாதத்தில், 50,001 லக்கேஜ்களை தவற விட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, நாகை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்ய ஆட்டம் தொடங்கியது. 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமாக இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணி, 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்நிலையில், இந்திய அணி, 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.