நடந்து முடிந்த பிரிட்டன் பொது தேர்தலில், தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகளுக்கு பின் வெற்றி பெற்ற நிலையில், தொழிலாளர் கட்சி தலைவர் கேர் ஸ்டாமர், அந்நாட்டின் பிரதமராக அறிவிக்கப்பட்டார். இந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில், லீசெஸ்டர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷிவானி ராஜா வெற்றி பெற்றுள்ளார். அவர் இன்று பார்லிமென்டில் பகவத் கீதையை கையில் வைத்துக் கொண்டு எம்.பி. பதவி ஏற்றுள்ளார்.
புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், 2 மாதங்களில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என ரயில்வே உள்கட்டமைப்பு பிரிவு உறுப்பினர் அணில் குமார் கண்டேல்வால் தெரிவித்துள்ளார். பழைய தூக்கு பாலத்தை அகற்றுவது குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார். அதோடு, ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை புதிய ரயில் வழிதடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
"கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.13 கோடி மகளிர் மாதந்தோறும் ₹1000 பெற்று வரும் நிலையில், இத்திட்டத்தில் பல்வேறு காரணங்களால் விடுபட்ட 1.48 லட்சம் மகளிருக்கு ஜூலை15 முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்" என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மழையின் போது நிலத்தில் வேலை செய்தவர்களும், மரத்தின் கீழே ஒதுங்கியவர்களும் மின்னல் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மொத்தம் 38 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
8 வருட இடைவெளிக்குப் பிறகு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்தாண்டு நடைபெற உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த தொடருக்கான மாதிரி அட்டவணையை ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமர்ப்பித்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் மோதும் முதல் போட்டி மார்ச் ஒன்றாம் தேதி லாகூரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்குச் செல்ல வாய்ப்பில்லை என தகவலும் பரப்பப்பட்டு வருகிறது.