நேபாளத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அதிக இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிர்கஞ்ச் நோக்கி 2 பஸ்கள் சென்ற போது மத்திப நேபாளம் மதன் அஷ்ரிட் சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில், பஸ்கள் இழுத்து செல்லப்பட்டு அருகில் இருந்த திரிசூலி என்ற ஆற்றில் விழுந்துள்ளது. பஸ்களில் பயணம் செய்த 63 பேரை தேடும் பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராமை நியமிக்க நீதிபதிகள் தேர்வுக் குழு (கொலீஜியம்) பரிந்துரை செய்துள்ளது. கே.ஆர்.ஸ்ரீராம் தற்போது மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவைகளை வழங்க பொதுமக்களுக்கு உதவுவதற்காக 'MAY I HELP YOU' வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதை நிரப்புதல், தேவையான ஆவணங்கள் என்னென்ன, அலுவலகத்திற்கு நேரில் வரும் நேரம் போன்ற அடிப்படை சந்தேகங்களுக்கு இங்கு விளக்கம் பெற்றுக் கொள்ள முடியும்.
கல்கி 2898 ஏ.டி. திரைப்படம் வெளியான இரு வாரங்களில் 900 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் நடித்த படங்களிலேயே அதிக வசூல் குவித்த படம் என்ற பெருமையை கல்கி திரைப்படம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் குரோஷியாவின் டோன்னா வெகிச் என்பவருடன் இத்தாலியின் பாவ்லினி மோதி பைனல் போட்டிக்கு முன்னேறிருக்கிறார்.
சமீபத்திய பிரெஞ்ச் ஓபன் பைனலுக்கும் பாவ்லினி முன்னேறி இருந்தார். இதையடுத்து அமெரிக்காவின் செரினா வில்லியம்சிற்கு (2015, 2016ல்) அடுத்து, ஒரே சீசனில் பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் என இரு கிராண்ட்ஸ்லாம் தொடரில் பைனலுக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்பது பாராட்டத்தக்கது.