அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் (78) போட்டியிட இருக்கிறார். இந்நிலையில், பென்சில்வேனியா மாநிலத்தின் பட்லர் நகரில் குடியரசு கட்சி சார்பில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் ட்ரம்ப் பங்கேற்றிருக்கிறார்.
அமெரிக்காவில் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. காதில் குண்டு பாய்ந்த நிலையில் நூலிழையில் அவர் உயிர் தப்பித்து, அவரது ஆதரவாளர் குண்டு பாய்ந்து உயிரிழந்ததுள்ளார். உடனே துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலில் ரத்ன பந்தர் என்ற பொக்கிஷ அறை உள்ளது. அதில் புரி ஜெகந்நாதருக்காக மன்னர்கள் நன்கொடையாக அளித்த தங்கம், வைரம், வைடூரிய நகைகள், கிரீடங்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறை கடந்த 46 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், தொல்பொருள் ஆய்வுத்துறை புனரமைப்பு பணி மேற்கொள்வதற்காக, இந்த ரத்ன பந்தர் அறையை நேற்று திறக்க ஒடிசா அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 18.50 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' இன்று முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 2.20 லட்சம் மாணவர்கள் இதில் பயன்பெறுவதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி காமராஜர் பிறந்த நாளான இன்று திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி அரசு உதவிபெறும் பள்ளியில் தொடக்க விழா நடைப்பெறுகிறது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.