வங்கதேசம் - பாகிஸ்தான் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு அரசுப் பணியில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை வங்கதேசத்தில் இருந்து வந்தது. இதற்கு எதிராக கடந்த 2018-ல் மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் இடஒதுக்கீடு முறை நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் 30 சதவீத இட ஒதுக்கீடை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டது. இதை எதிர்த்து வங்கதேசம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் மாணவர்கள் மற்றும் போலீசார் இடையே வன்முறையாக மாறியதால், ஏற்கனவே இந்த போராட்டத்தில் சிக்கி சுமார் 10 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
'சுங்கச்சாவடியைக் கடக்கும்போது மட்டும் ஸ்டிக்கரை முன்பக்க கண்ணாடியில் காட்டுவதால் காலதாமதம் ஏற்படுவதால், இனி வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் 'ஃபாஸ்டேக்' ஒட்டியிருக்க வேண்டும். ஒட்டாவிட்டால் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்' என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
'தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில், கடந்த ஏழு ஆண்டுகளில், ரயில்வே பாதுகாப்பு படையினர், 9,630 சிறுவர்களை மீட்டுள்ளனர். அதில், 8,698 பேர் வீட்டைவிட்டு வெளியேறியவர்கள். 132 பேர் காணாமல் போனவர்கள், 309 பேர் ஆதரவற்றவர்கள்; 19 பேர் கடத்தப்பட்டவர்கள்; 44 பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். குழந்தைகள் கடத்தலில் இருந்து, 105 பேர் காப்பாற்றப்பட்டனர். கடந்த ஆண்டில் 1,215 சிறுவர், சிறுமியர்; நடப்பாண்டில் 788 சிறுவர், சிறுமியர் மீட்கப்பட்டுள்ளனர்' என தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நடிகர் சூர்யா தனது 48-வது பிறந்தநாளை வரும் 23-ம் தேதி கொண்டாடுகிறார். இந்நிலையில், அவரின் பிறந்த நாளை முன்னிட்டு, ஹரி இயக்கத்தில், கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘வேல்’ திரைப்படம் 19-ம் தேதியான இன்று ரீ ரிலீஸ் ஆகிறது.
8 முறை நடந்துள்ள மகளிர் ஆசிய கோப்பை தொடரில், 7 முறை இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. இந்த நிலையில், இன்று 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் நேபாளம், UAE அணிகள் மோதுகின்றன.