ஜனநாயக கட்சியில் ஜோ பைடனுக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு கிளம்பியதாலும், நாட்டு மக்கள் மற்றும் கட்சியின் நலன் கருதியும் ஜோ பைடன் அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து கமலா ஹாரிஸுக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட எனது முழு ஆதரவை வழங்குவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த நிலையில், இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
வங்கதேசத்தில், மாணவர்களின் தொடர் போராட்டத்திற்கு பின்னர், அரசு வேலைவாய்ப்புகளில் விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30% இடஒதுக்கீட்டை ரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 93 சதவீத அரசு வேலைகள் தகுதி அடிப்படையிலும் 5 சதவீதம் மட்டுமே தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கவும் உத்தரவு வழங்கியுள்ளது.
"பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை அடுத்த ஆண்டு நவம்பரில் தொடங்கவுள்ளது. விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே தாம்பரம் வழியாக மெட்ரோ ரயில் திட்டம் நடந்து வருகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நில எடுப்பு 99% முடிந்து விட்டது" என சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
உலக புகழ் பெற்ற புராதன சின்னமாகவும், சுற்றுலாத் தலமாகவும் உள்ள தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மற்றும் கவர்னர் மாளிகையை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியில் தமிழக தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது. அதற்காக கடுக்காய், வெல்லம் கொண்ட கரைசல் மற்றும் சுண்ணாம்பு, மணல் சேர்ந்த பழங்கால கட்டுமான கலவை தயார் செய்யப்பட்டுள்ளதோடு, இயந்திரங்களை பயன்படுத்தாமல் பாரம்பரிய முறையில் கட்டுமான பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ஜூலை 26 அன்று தொடங்கவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு உதவும் வகையில், எட்டரை கோடி ரூபாயை இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு பி.சி.சி.ஐ. வழங்கியுள்ளது.