சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் 10ஆவது கட்ட அகழாய்வுப் பணியில், சுடுமண்ணால் ஆன 6 உறைகள் பொருத்தப்பட்ட வடிகால் குழாய் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வடிகால் குழாயின் தொடர்ச்சி அடுத்தக் குழிக்குள்ளும் நீளும் நிலையில், அதைப் பற்றி முழு விபரமும் அறிய தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம், வயநாட்டில் பெய்து வரும் அதிகனமழையால் மலைகளுக்கு இடையே உள்ள முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில், தேயிலை தோட்டங்கள், சுற்றுலா தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து, அந்த பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 147 பேர் பலியாகியுள்ளனர். நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகளில் வசித்த 400 பேரின் கதி கேள்விக்குறி ஆன நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இன்னும் கனமழை தொடர்வதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பொதுத்துறை வங்கிகள், குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து அபராதமாக கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், கிட்டத்தட்ட 8,500 கோடி ரூபாய் வசூலித்துள்ளன. நேற்று நாடாளுமன்றத்தில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த, நிதித்துறைக்கான மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி இது குறித்து தெரிவித்துள்ளார். மேலும் வெவ்வேறு வங்கிகள் மற்றும் வெவ்வேறு விதமான கணக்குகளை பொறுத்து, இந்த அபராத தொகை மாறுபடுவதாகவும் கூறியுள்ளார்.
'ரகு தாத்தா' வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படம். கீர்த்தி சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரவீந்திர விஜய் மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை சுமன் குமார் இயக்கியுள்ளார். இந்த நிலையில், 'ரகு தாத்தா' திரைப்படத்தின் டிரைலர் இன்று பிற்பகல் 1.58 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்திய அணி, நேற்று பல்லேகெலேயில் 3வது போட்டியில் இலங்கையுடன் களம் இறங்கியது. இந்த போட்டியில் இலங்கை அணியை வீழ்த்திய இந்திய அணி, அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.