ரஷ்ய அதிபர் புடின் அழைப்பின் பேரில், இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி நேற்று (ஜூலை 08) மாஸ்கோ சென்றடைந்தார். பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் இருவரும் இன்று இந்தியா,ரஷ்யா இடையிலான 22-வது உச்சி மாநாட்டில் கலந்துக்கொண்டு வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
கேரளாவில் அமீபா நுண்ணுயிரியால் மூளையழற்சி பாதிப்பு பரவி வருவதால் தமிழகத்தில் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் யாரும் குளிக்க வேண்டாம் என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். கேரள மாநிலத்தில் அமீபா நுண்ணுயிரியால் ஏற்படும் மூளையழற்சி பாதித்து இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் வசிக்கும் தேயிலை தோட்ட தொழிலார்களை வெளியேற்ற மேற்கொண்ட வழக்கில், மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசின் டான் டீ நிர்வாகம் ஏற்று நடத்த முன்வரலாம் எனவும், 3 தலைமுறைகளாக மாஞ்சோலையில் வசிக்கும் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றக் கூடாது எனவும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீரில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தீவிரவாதிகளுடன் பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 5 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள், ஐந்து போட்டி கொண்ட டி20 தொடரில் பங்கேற்று உள்ளன. இதில் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. இந்த நிலையில், 3 வது போட்டி ஜிம்பாப்வே-வில் உள்ள ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் நாளை (புதன் கிழமை) மாலை 4:30 மணிக்கு துவங்க உள்ளது.