

பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா செய்ததை எடுத்து, புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி(54) தேர்வு செய்யப்பட்டார். பீகாரின் முங்கர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், அரசியல் பின்னணியை கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர். இவரது தந்தை சகுனி சவுத்ரி பீகாரில் நன்கு அறியப்பட்ட அரசியல்வாதியாக இருந்தவர்.
ஆரம்பத்தில் ராஷ்டிரிய ஜனதாதளம் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளில் முக்கிய பொறுப்பு வகித்த சாம்ராட் சவுத்ரி, பின்னாளில் பாஜகவில் இணைந்து அசுர வளர்ச்சி பெற்றார். ஜனதாதள – பாஜக கூட்டணி ஆட்சியின் போது பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருந்தார். பின்னர் இந்தக் கூட்டணி உடைந்த பின், மாநிலத்தில் நிதிஷ்குமாருக்கு கடுமையான சவாலாக பார்க்கப்பட்டார்.
2023 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தின் பாஜக தலைவராக இவர் நியமனம் செய்யப்பட்டார் . மீண்டும் ஜனதாதளம் – பாஜக கூட்டணி உருவான போது மாநிலத்தின் துணை முதல்வர் பதவி சாம்ராட் சவுத்ரிக்கு வழங்கப்பட்டது. தற்போது நிதிஷ் பதவி விலகியதை அடுத்து பீகார் மாநில முதல்வர் பதவி அவருக்கு கிடைத்துள்ளது.
நிதிஷ்குமார் ராஜினாமாவைத் தொடர்ந்து, பாஜ எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள் குழு தலைவராக சாம்ராட் சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் அவர் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் முறைப்படி நாளை பதவி ஏற்க உள்ளார்.