

சென்னையில் எல்பிஜி எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஆட்டோக்கள் கேஸ் நிரப்ப 2 கிலோ மீட்டருக்கு அணிவகுத்து நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆட்டோக்களுக்கு நிரப்பப்படும் கேஸ் தட்டுப்பாடு காரணமாக சென்னை தியாகராய நகரில் நூற்றுக்கணக்கான ஆட்டோக்களுடன் ஓட்டுநர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கின்றனர். ஆட்டோக்களுக்கு நிரப்பும் கேஸ் தட்டுப்பாடு காரணமாக ஆட்டோ ஓட்டுநர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.
நூற்றுக்கணக்கான வாகனங்கள் பல மணி நேரம் நின்று தங்கள் ஆட்டோக்களுக்கு கேஸ் நிரப்புவதாகவும்,
இந்தப் பிரச்சனையை ஒரு மாத காலமாக இருப்பதாகவும், இருப்பினும் கடந்த 2 வாரமாக இந்த தட்டுப்பாடு மிக அதிக அளவில் நிலவுவதாகவும் ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக காலை நேரங்களில் தான் அதிக சவாரி கிடைக்கும் என்றும், ஆனால் அந்த சமயத்தில் தான் அதாவது காலையில் தான் பங்குகளில் கேஸ் கிடைக்கிறது என்றும் மதியத்திற்கு மேல் கிடைப்பதில்லை என்றும், இதனால் அவர்களுக்கு கிடைக்க கூடிய வருமானம் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.
சென்னையில் சுமார் 40 ஆயிரம் ஆட்டோக்கள் எல்பிஜி எரிவாயுவை பயன்படுத்தி இயக்கப்படுகிறது. ஆனால் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலானா வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக்கூடிய 38 எல்பிஜி நிலையங்கள் மட்டும்தான் உள்ளன. மேற்கு ஆசியாவில் நிகழும் போர் சூழல் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக பெரும்பாலான தனியார் பங்குகள் மூடப்பட்டுள்ளதால் அரசு பொதுத்துறை பங்குகளில் கூட்டம் அலைமோதுகின்றது.