மின்மாற்றிகள் கொள்முதலில் முறைகேடு நடக்கவில்லை: அரசு தரப்பு விளக்கம்!

மின்மாற்றிகள் கொள்முதலில் முறைகேடு நடக்கவில்லை: அரசு தரப்பு விளக்கம்!
Published on

மிழக மின்சார வாரியத்தில் மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில்  சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக அறப்போர் இயக்கம் சமீபத்தில் குற்றம் சாட்டி இருந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு சார்பாக விளக்கம் கொடுத்து செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது.

அந்த செய்திக் குறிப்பில், ‘அனைத்து ஒப்பந்ததாரர்களும் ஒரே விலைப்புள்ளியை குறிப்பிட்டு இருந்ததால், மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் கூறப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மின்மாற்றிகளை விற்பனை செய்து வருகின்றன. கடந்த 2011ம் ஆண்டு முதல் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்ட கோப்புகளை பரிசீலனை செய்ததில் பெரும்பாலான நேரங்களில் நிறுவனங்கள் ஒரே விலைப்புள்ளியை சமர்ப்பித்திருப்பது தெரிய வருகிறது.

இதுபோன்று மின்மாற்றிகள் தயாரிக்கும் எல்லா நிறுவனங்களும், சென்னை முதல் நாகர்கோவில் வரை இருக்கும் 44 மின் பகிர்மான வட்டங்களுக்கு மின்மாற்றிகளை வழங்குவதால், அவை சரக்கு வாகனக் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. மேலும், எல்லா நிறுவனங்களும் உள்ளுரிலேயே பல ஆண்டுகளாக இயங்கி வருவதால் அவர்களுக்கு மற்ற நிறுவனங்களின் விலைப்புள்ளிகள் தெரிய வாய்ப்பு உள்ளது. மேலும், ஒப்பந்த விலைப்புள்ளிகள் அனைத்தும் கணினி மூலமாகவே பெறப்படுகிறது. ஆகவே, ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒரே விலைப்புள்ளியை சமர்ப்பித்திருந்தாலும், தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத்தன்மை சட்டம்-1998 விதி எண்10(5)ன்படி தமிழக மின்வாரியத்துக்குத் தேவையான மின்மாற்றிகளை தகுதி வாய்ந்த அனைத்து சிறு, குறு நிறுவனங்களுக்கும் பிரித்து வழங்கி மேற்படி விதிகளின்படி கொள்முதல் ஆணை அளிக்கப்பட்டு இருக்கிறது.

ஒரே மாதிரி விலைப்புள்ளியை மின்மாற்றி தயாரிக்கும் நிறுவனங்கள் கோருவது கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் நிகழும் நிகழ்வுகள் அல்ல. இந்த நடைமுறை, கடந்த 10 வருடங்களுக்கும் மேலாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும், ஜெம் போர்டலில் குறிப்பிட்ட விலையை விட அதிக விலைக்கு மின்மாற்றிகள் வாங்கியுள்ளதாக புகாரில் கூறப்பட்டு உள்ளது. ஒப்பந்த புள்ளிகளை பரிசீலனை செய்யும்போது அன்றைய தேதியில் தமிழ்நாடு மின்சார வாரிய விவரக் குறியீடுகளுடன் பெரும்பான்மையான விவரக் குறியீடுகளுடன் ஒத்துவரும் ஜெம் போர்டல் விவரக் குறியீடுகள் கொண்ட விலையை ஒப்பிட்டுத்தான் ஒப்பந்தப்புள்ளி வழங்கப்படுகிறது. ஆனால், இன்றைய தேதியில் ஜெம் போர்டல் விலையை எடுத்து ஒப்பீடு செய்துள்ளது சரியான நடைமுறையாகாது.

இந்தப் புகாரில் மற்ற மாநிலங்களோடு மின்மாற்றிகளின் கொள்முதலை ஒப்பீடு செய்து 397.37 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. புகாரில் மின்மாற்றிகளின் வேறுபட்ட விவரக் குறியீடுகளின் அடிப்படையிலும், வேறுபட்ட மூலப்பொருட்களின் அடிப்படையிலும், உதாரணமாக காப்பர் மின்சுருள் கொண்ட மின்மாற்றிகளோடு ஒப்பிடு செய்யாமல், அலுமினியம் மின்சுருள் கொண்ட மின்மாற்றிகளோடு ஒப்பீடு செய்துள்ளது. மேலும், அந்த புகாரில் நிர்ணயம் செய்த விலை, தவறாகக் கணக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

ஆகவே, திமுக அரசு எந்த நிலையிலும் முறைகேடுகள் நடைபெறுவதை அனுமதிக்காது. மின்மாற்றிகள் கொள்முதலில் புகாரில் கூறியபடி எந்தவித முறைகேடுகளும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைபெறவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது’ என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com