

தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் தங்கள் பணி விவரங்கள், மதிப்பீடுகள், சம்பள உயர்வுகள் மற்றும் நிலுவைத் தொகைகள் குறித்து கவலைப்படுவார்கள். ஏனெனில் வேலையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய பிறகும், தகுதியான சம்பள உயர்வு மறுக்கப்படும்போது பல ஊழியர்கள் தாங்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதாக உணர்கிறார்கள். பெரும்பாலான நிறுவனங்கள் சம்பள உயர்வுகளுக்கான நீண்ட செயல்முறையைக் கொண்டுள்ளன.
அரசு ஊழியர்கள் கட்டமைக்கப்பட்ட ஊதிய விதிகளைப் பின்பற்றும் அதே வேளையில், தனியார் நிறுவனங்கள் பொதுவாக சம்பள உயர்வுகள், பதவி உயர்வுகள் மற்றும் செயல்திறன் வெகுமதிகளைத் தீர்மானிப்பதில் அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளன. உங்களின் அப்ரைசல் (Appraisal) முடிவை நீங்கள் எதிர்ப்பதற்கு முன், இந்தியத் தொழிலாளர் சட்டங்களின் கீழ் உங்களுக்கான உரிமைகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.
இந்தியத் தொழிலாளர் சட்டங்களின் கீழ் நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம் வாங்க:
இந்திய அரசியலமைப்பின் கீழ் ஊழியர் உரிமைகள்:
இந்திய அரசியலமைப்பின் 14 மற்றும் 15-ம் பிரிவுகள் சமத்துவத்திற்கு உத்தரவாதம் அளிப்பதுடன், மதம், சாதி, பாலினம், இனம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடை செய்கின்றன. இருப்பினும்,இந்த பாதுகாப்பு முக்கியமாக அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான தனியார் நிறுவனத்தை பொறுத்தவரை, ஒரு ஊழியர் தங்களுக்கு எதிரான பாகுபாட்டை திட்டவட்டமாக நிரூபிக்காத வரை, இந்த அரசியலமைப்பு விதிகளின் கீழ் நேரடியாகப் பலன் பெற முடியாது.
இந்தியாவில் சம்பள உயர்வு சட்டங்கள்: ஊதியச் சட்டம் மற்றும் சம ஊதிய விதிகள் எவற்றை உள்ளடக்கியுள்ளன
இந்தியாவின் 2019-ம் ஆண்டு ஊதியச் சட்டம், பாலின அடிப்படையிலான ஊதியப் பாகுபாட்டைத் தடைசெய்து, சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. இருப்பினும், நிர்வாகத்தின் விருப்பம், பாரபட்சம் அல்லது அகநிலை செயல்திறன் மதிப்பீடுகள் காரணமாக ஒரு ஊழியர் குறைந்த மதிப்பீட்டையோ அல்லது ஊதிய உயர்வையோ பெறும் சூழ்நிலைகளை இந்தச் சட்டம் சரியாக கையாளவில்லை.
தனியார் துறையில் நிறுவனங்களின் வரம்பற்ற அதிகாரம்
தனியார் துறையில் உள்ள முதலாளிகளுக்கு மதிப்பீடுகள் மற்றும் சம்பள உயர்வை நிர்ணயிப்பதில் முழு சட்டப்பூர்வ அதிகாரங்கள் உள்ளன. சட்டவிரோத பாகுபாடு அல்லது நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைகளுக்கு (Unfair labour practices)ஆதாரம் இருந்தால் தவிர, நீதிமன்றங்கள் பொதுவாக நிறுவனங்களின் உள் விவகார முடிவுகளில் தலையிடுவதைத் தவிர்க்கின்றன. இதன் விளைவாக, உங்களுக்கு அதிக ஊதிய உயர்வு கிடைக்கத் தகுதியுள்ளது என்று நம்புவது மட்டும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப் போதுமானதாக இருக்காது.
பணியிடத்தில் மதிப்பீட்டுப் பாகுபாடு: ஊழியர்கள் எப்போது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்?
ஒரு ஊழியருக்கு இழைக்கப்படும் அநீதி பாலினம், சாதி, மதம் அல்லது மாற்றுத்திறன் போன்ற பாதுகாக்கப்பட்ட பண்புகளுடன் வேறுபட்ட நடத்தை இணைக்கப்பட்டிருந்தால், ஒரு ஊழியரின் வழக்கு வலுப்பெறுகிறது.
மேலும், ஒரு நிறுவனத்தில் ஒரே மாதிரியான பணிகள், தகுதிகள் மற்றும் பொறுப்புகளைக் கொண்ட இரு பணியாளர்களில் ஒரு ஊழியர் மட்டும் தொடர்ந்து உங்களை விடச் சிறப்பாக நடத்தப்படுவதை நிரூபித்தாலோ அல்லது நிறுவனம் தனது சொந்த அப்ரைசல் கொள்கைகளையே மீறிச் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தாலோ ஊழியர்கள் சட்டப்படி புகார் அளிக்க முடியும்.
நியாயமற்ற மதிப்பீட்டு முறையை நிரூபிக்க உங்களுக்குத் தேவையான 3 முக்கிய விஷயங்கள்
ஒரு மதிப்பீட்டு முடிவை எதிர்த்துப் போராட, ஊழியர்களுக்குப் பொதுவாக வலுவான ஆதாரங்கள் தேவை. இதில் பின்வருவன அடங்கும்:
* ஏறக்குறைய ஒரே மாதிரியான பணியில் உள்ள, ஒப்பிடத்தக்க ஒரு சக ஊழியர் உங்களை விட சிறந்த வெகுமதிகளைப் பெறுவது
* இழைக்கப்பட்ட அநீதி ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பாகுபாட்டின் அடிப்படையில் அமைந்தது என்பதற்கான ஆதாரம்.
* வெகுமதி அளிக்கப்படாத உங்களின் சிறப்பான பணித்திறனை உறுதிப்படுத்தும் மின்னஞ்சல்கள், முந்தைய மதிப்பீட்டுப் பதிவுகள் (Review records) போன்ற ஆவணங்கள் ஆதாரம் இல்லாமல், நிர்வாகத்தின் பட்சபாதத்தை நிரூபிப்பது கடினம்.
நியாயமற்ற சம்பள உயர்வை எதிர்த்து வழக்குத் தொடர முடியுமா?
ஊழியர்கள் முதலில் நிறுவனத்தின் உள் விவகார குறைதீர்ப்பு குழுவை (Internal grievance mechanisms) அணுக வேண்டும். அங்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில், தொழிலாளர் அதிகார அமைப்புகளையோ அல்லது தொழிலாளர் நீதிமன்றத்தையோ (Labour Court) நாடலாம். ஆனாலும், வெறும் மேலாளரின் தனிப்பட்ட பச்சாதாபம் அல்லது பணி மதிப்பீட்டு வேறுபாடுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட வழக்குகளில் வெற்றி பெறுவது எளிதல்ல. நீதிமன்றங்கள் நிர்வாகத்தின் தொழில்முறை முடிவுகளில் தலையிடப் பெரிதும் விரும்புவதில்லை.
சம்பள உயர்வு வழக்குகளில் முதலாளியின் வாதம்:
சம்பள உயர்வுகள் தகுதி அடிப்படையிலானவை என்றும், அவை நிர்வாகத்தின் விருப்புரிமைக்கு உட்பட்டவை என்றும் நிறுவனங்கள் அடிக்கடி வாதிடுகின்றன. மற்றொரு ஊழியருக்கு வலுவான தகுதிகள், நீண்ட அனுபவம், அதிகப் பொறுப்புகள் அல்லது சிறந்த பணித்திறன் குறியீடுகள் (Performance metrics) இருந்தன என்று அவர்கள் கூறலாம். ஒப்பந்த கடமைகளைத் தாண்டி, ஒரு ஊழியர் கூடுதல் உழைப்பைத் தந்தார் என்பதற்காகவே சட்டப்படி ஊதிய உயர்வு அளிக்க நிறுவனம் கடமைப்பட்டிருக்கவில்லை என்றும் வாதாட வாய்ப்புள்ளது.
இந்தியாவில் சம்பளப் பாகுபாடு வழக்குகள்: நீதிமன்றங்கள் எவற்றைக் கருத்தில் கொள்கின்றன?
பாலினம், சாதி அல்லது மாற்றுத்திறன் போன்ற காரணங்களால் ஒரு ஊழியர் புறக்கணிக்கப்படும்போது மட்டுமே நீதிமன்றங்கள் விசாரணையில் தீவிரம் காட்டுகின்றன. சாதாரண மதிப்பீட்டு முரண்பாடுகளுக்கு, நீதித்துறைத் தலையீடு மிகவும் அரிதாகவே உள்ளது.