“வேண்டாமே சீரியல் லைட்!”

மும்பை பரபர!
“வேண்டாமே சீரியல் லைட்!”

ல்வேறு விழாக் கொண்டாட்டங்கள் சமயத்திலும் ஓய்வு விடுதிகள், கடைகள், உணவகங்கள் ஆகியவைகளில் மரங்கள் மற்றும் தாவரங்களைச் சுற்றி சீரியல் லைட்  உட்பட வண்ண – வண்ண விளக்குகளைத் தொங்க விட்டும், சுற்றியும் அலங்கரிப்பது வழக்கமாக உள்ளது.

இதனால் தாவரங்களின் ஆரோக்கியம் மற்றும் அதன் வாழ்க்கைச் சுழற்சியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது மட்டுமல்ல; பறவைகளும் பாதிக்கப்படுகின்றன.

புனே நகரில் முக்கியப் பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் செயற்கை விளக்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவ்விளக்குகளால் ஒளி மாசுபாடு மரங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், தாவரங்களுக்கு இருள் தேவைப்படுகையில் செயற்கை விளக்குள் பொருத்துவது தடையாக உள்ளதென இது குறித்த ஆய்வு தெரிவித்துள்ளது.

வணிக ரீதியில் விளக்குகளைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டமில்லாததால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கடினமென்று புனே மாநகராட்சி தோட்டக் கலைத்துறை தெரிவித்துள்ளது.

அபராதம் - 25,000/-

அடேங்கப்பா! அபராதம் ` 25,000/- எதற்காக?

காற்று மாசுவை ஏற்படுத்துவோருக்குத்தான் இந்த அபராதம். மும்பை தானே மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காற்று மாசு காரணம் பொதுமக்கள் பாதிக்கப்பட, புகார்கள் மாநகராட்சியில் குவிந்தன.

இது குறித்த மாநகராட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தானே டெவலப்பர்கள்; சாலைப்பணி ஒப்பந்ததாரர்கள், ரெடிமிக்ஸ் கான்க்ரீட் ஆபரேட்டர்கள், மெட்ரோ ரெயில் திட்டப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இவர்களது கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கண்காணிக்க கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்படுமென துணை கமிஷனர் தெரிவித்தார்.

மேலும், காற்று மாசுவிற்குத் தீர்வு காணும் விதமாக மாநகராட்சி வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளனர். இதனை மீறுவோருக்கு ` 5000/- முதல் `  25,000/- வரை அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தானே நகரத்தில் 22 லட்சம் மக்கள் தொகை. ஆனால், வாகனங்களின் எண்ணிக்கை 23 லட்சத்திற்கும் மேலாக உள்ளதால் போக்குவரத்து அதிகமாக, காற்று மாசு அதிகரிக்கிறது என்றும் கூறப்பட்டது. காற்று மாசு இல்லாத சூழலை உறுதி செய்ய பொதுமக்களும் மாநகராட்சி ஊழியர்களும் ஒன்றிணைந்து செயல்படுதல் வேண்டுமென” மாநகராட்சியின் சுற்றுச் சூழல் அதிகாரி கூறியுள்ளார்.

2,500 கிலோ அரிசியில் உருவம்!’ 

2,500 கிலோ அரிசியிலா..? யார் உருவம்..?

நடிகர் சோனு சூட் உருவம்தானுங்க. பல்வேறு மொழிப் படங்களில் முக்கிய வேடங்களிலும், வில்லனாகவும் நடித்து வரும் சோனு சூட், ஏழை மக்களுக்குப் பலவகைகளிலும் உதவி செய்து வருகிறார். கொரோனா காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நூற்றுக் கணக்கான மக்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளை உடனுக்குடன் செய்து வருவதால், பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் அநேகர் கோரிக்கை விடுத்து உதவி கேட்கின்றனர். இதற்கென தனிக்குழு ஒன்றினை இவர் அமைத்துள்ளார்.

இவரைப் போற்றும் விதமாக, மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியில் வசிக்கும் மக்கள் ஒரு ஏக்கர் நிலத்தில் 2,500 கிலோ அரிசியைக் கொண்டு அவரது உருவத்தை வரைய, அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் சோனு சூட். அதில் ‘2,500 கிலோ மற்றும் 1 ஏக்கர் நிலம் எல்லையில்லா அன்பு’ என்றும் பதிவிட்டுள்ளார்.

(அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com