வந்தே பாரத் ரயில் ஒன்றை, சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றின் எஞ்சின் இழுத்துச் சென்ற காட்சி சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடியால் துவங்கி வைக்கப்படும் வந்தே பாரத் ரயிலை பொதுமக்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். நவீன காலத்திற்கேற்ப இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.
சமீபத்தில் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.
இந்த ரயில் மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை - கோவை இடையே பயணிகள் அதிக அளவில் பயணிக்கும் நிலையில் வந்தே பாரத் ரயில் சேவைக்கான டிக்கெட் வரிசையாக இந்த மாதம் முழுக்க பல சீட்களுக்கு புக் செய்யப்பட்டு உள்ளது. அந்த அளவிற்கு மக்கள் இந்த ரயிலில் செல்ல தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதே சமயம் வந்தே பாரத் ரயில் மீது அடிக்கடி மாடுகள் முட்டுவதும், மழைநேரத்தில் ஒழுகுவதும் தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், வந்தே பாரத் ரயில் ஒன்றை, சாதாரண எக்ஸ்பிரஸ் ரயிலின் எலக்ட்ரிக் எஞ்சின் இழுத்துச் சென்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதை சமூகவலைதளங்களில் பதிவிட்டு, வந்தே பாரத் ரயில் எஞ்சினுக்கு ஏதாவது பிரச்சனையா? அல்லது மாடு முட்டுவதை தவிர்க்க இப்படி பழைய எஞ்சினை பயன்படுத்துகிறீர்களா என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர். இந்நிலையில், வந்தே பாரத் ரயில் பயணம் தொடங்குவதற்கு முன்பு அதன் காலிப் பெட்டிகளை சோதனை செய்ய நடத்தப்பட்ட பழைய வீடியோ என்று இந்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.