இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சகோதரி அனம் மிர்சா, சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்ட ஒரு தகவல் தற்போது வைரலாகி வருகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகளான ஜிபே (GPay) மற்றும் யுபிஐ (UPI) போன்றவற்றை தான் பயன்படுத்துவதில்லை என்றும், இதனால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வெகுஜன மக்களிடையே பரவலாகியுள்ள நிலையில், அனம் மிர்சாவின் இந்த கருத்து பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. "நான் ஜிபே, யுபிஐ போன்றவற்றை பயன்படுத்துவதில்லை. இவை உடனடி பணப் பரிவர்த்தனை வசதி, திட்டமிடப்படாத செலவுகளை (impulse purchases) ஊக்குவிக்கிறது என்பதால், அதைத் தவிர்க்கவே இந்த முடிவை எடுத்ததாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மேலும், "யுபிஐ இல்லை, உடனடி பணம் இல்லை, இந்த ஆண்டு என்னுடைய யுபிஐ கணக்குகளை காலி செய்துவிட்டேன். செயலிகளையும் நீக்கிவிட்டேன். இருப்பும் இல்லை. எதுவும் இல்லை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனம் மிர்சாவின் இந்தப் பதிவு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் இக்காலத்தில், ரொக்கப் பயன்பாட்டின் மீதான அவரது நம்பிக்கையைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் இது டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மிகப்பெரிய வினாவாக அமைந்துள்ளது.
அனம் மிர்சா, ஃபேஷன் துறையில் தனது அடையாளத்தைப் பதித்து வருகிறார். சானியா மிர்சாவின் கணவர் சோயப் மாலிக் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமூக வலைத்தளப் பதிவுகள் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான அவரது "ஓபன் டாக்", சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பலர் அவரது கருத்தை ஆதரிக்கும் அதே வேளையில், சிலர் டிஜிட்டல்மயமாக்கலின் அவசியத்தை வலியுறுத்தி கருத்து தெரிவித்து வருகின்றனர்.