இவர்கள் மட்டுமே சந்திரயான் -3 ஏவுதலை நேரில் காண முடியும்.

இவர்கள் மட்டுமே சந்திரயான் -3 ஏவுதலை நேரில் காண முடியும்.

ஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் வரும் 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், ஏவுதலை நேரில் காண்பதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்துபோனது. இந்த நிகழ்வை மொத்தம் 5000 பேர் மட்டுமே கண்டுகளிக்க உள்ளனர். 

இந்தியாவின் கனவு திட்டம் எனப்படும் சந்திரயான் 3 தற்போது நினைவாகப் போகிறது. வருகிற 14 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, மதியம் 2:30 மணிக்கு இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே இந்திய மக்களின் பார்வை இஸ்ரோவின் மீது படத் தொடங்கி இருக்கிறது. 

நிலவில் சொற்பமான நாடுகளே தடம் பதித்திருந்தாலும், அதில் இந்தியாவும் தற்போது இணையப்போவதை நினைத்தால், ஒரு இந்தியராக நாம் அனைவருமே பெருமிதப்படுவோம். எனவே, நமது நாட்டின் விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை நேரில் காண பலருக்கும் ஆர்வம் இருக்கும். அதற்காகவே ஸ்ரீஹரிக்கோட்டாவில் பார்வையாளர் கேலரி என்று ஒன்று இருக்கிறது. அந்த கேலரியில் நின்று பார்த்தால் வெறும் கண்ணாலேயே சந்திரயான் 3 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்வதை துல்லியமாகப் பார்க்க முடியும். 

எனவே சந்திராயன் மூன்று விண்ணில் ஏவப்படுவதற்கான தேதி அறிவித்ததில் இருந்தே அதை நேரில் பார்க்க ஆர்வமாய் இருந்தனர். இந்நிலையில் தான் நேற்று இஸ்ரோ ராக்கெட் ஏவப்படும் நிகழ்வை நேரில் காண்பதற்கான முன்பதிவைத் தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து முன்பதிவும் முடிந்துவிட்டது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள பார்வையாளர் கேலரியில், ஒரு நேரத்தில் 5000 நபர்கள் மட்டுமே கூடியிருந்து ராக்கெட் ஏவப்படும் நிகழ்வைப் பார்க்க முடியும். 

இந்த ஏவுதலை அந்த கேலரியில் நின்று பார்ப்பதற்கு கட்டணம் எதுவும் இல்லை என்றாலும், 5000 நபர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்பதால், இதற்கான முன்பதிவு அவசியமாக இருக்கிறது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள ராக்கெட் கார்டனில் ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி, எஸ்எல்வி, ஏஎஸ்எல்வி ஆகிய ராக்கெட் மாடல்கள் அமைக்கப் பட்டுள்ளன. அங்கு மக்கள் நின்று புகைப்படம் எடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

அடுத்ததாக அங்குள்ள லான்ச் வியூ கேலரி என்கிற இடத்திலிருந்து, இஸ்ரோவின் இரண்டு லான்ச் பேடுகளையும் வெறும் கண்களால் பார்க்க முடியும். இந்த இடத்தில் இருந்து தான் முன்பதிவு செய்த 5000 பேரும் ராக்கெட் ஏவுதலை நேரடியாகப் பார்க்கப் போகிறார்கள். 

சந்திரயான் -3 விண்ணில் ஏவப்படும் நிகழ்வை நேரடியாக காண்பதற்கான முன்பதிவு முடிந்திருந்தாலும், ராக்கெட் ஏவுதலை இணையத்தில் நேரடியாகக் காண முடியும். எனவே வீட்டிலிருந்தே டிவி-களிலும், சமூக வலைதளங்களிலும் அனைவரும் காணும் வகையில், நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com