
வடகிழக்கு எல்லைப்புற மாநிலமான மணிப்பூரில் நிலைமை மோசமானதற்கும், அங்கு வன்முறை ஏற்பட்டதற்கும் வெளிசக்திகளே காரணம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டதன் ஆண்டு விழா மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், "மணிப்பூரில் பல ஆண்டுகளாக மெய்டீஸ் இன மக்களும், குக்கி இன மக்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்துள்ளனர். திடீரென அங்கு எப்படி கலவம் மூண்டது? இந்த மோதல்களுக்கு வெளிசக்திகளே காரணமாகும்.
மணிப்பூரில் கலவரத்தைத் தூண்டி விட்டது யார்? அங்கு வன்முறை தற்செயலாக நடக்கவில்லை. அது நடத்தப்பட்டிருக்கிறது. மணிப்பூரில் அமைதி திரும்புவதற்காக பணியாற்றிய சங்கப் பரிவாரத் தொண்டர்களை நான் பாராட்டுகிறேன். சில சமூக விரோத கும்பல்கள் ஊடகங்கள், கல்வி, கலைச்சாரம் மற்றும் சமூக சூழல்கள் ஆகியவைகளைத் தங்களின் கைகளில் எடுத்துக்கொண்டு குழப்பத்தையும் ஊழலையும் உண்டு பண்ணுகிறார்கள்.
இவர்கள் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி வாக்குகளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். எனவே இவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சி, ஒற்றுமை, நேர்மை ஆகிய அடையாளத்தை மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும்" என்று அவர் பேசினார்.
அயோத்தியில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். அன்றைய தினம் நாடு முழுவதும் மக்கள் இதை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நாக்பூரில் நடந்த ஆர்எஸ்எஸ்-ன் வருடாந்திர விஜயதசமி விழாவில் பாடகர் மற்றும் இசையமைப்பாளருமான சங்கர்மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பேசிய சங்கர் மகாதேவன், "ஆர்எஸ்எஸ் பற்றி நான் என்ன சொல்ல முடியும். நான் வணங்க மட்டுமே முடியும்.
அகண்ட பாரதம் என்னும் நமது சிந்தனை, பாரம்பரியம், மற்று கலாச்சாரம் ஆகியவைகளைப் பாதுகாப்பதில் மற்றவர்களைவிட ஆர்எஸ்எஸ்-ன் பங்களிப்பு மகத்தானது. நாம் அனைவரும் அவரவர் துறைகளில் நாடு குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை அடைய பங்களிப்புச் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.