‘இந்தியாவின் பிரதமராகும் அனைத்துத் தகுதியும் பழனிசாமிக்கு இருக்கிறது’ தம்பிதுரை அதிரடி அறிவிப்பு!

‘இந்தியாவின் பிரதமராகும் அனைத்துத் தகுதியும் பழனிசாமிக்கு இருக்கிறது’ தம்பிதுரை அதிரடி அறிவிப்பு!

ந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று வேலூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேச தமிழகம் வந்திருந்தார். முன்னதாக அவர், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் அமித்ஷா, “இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பை தமிழகம் இரண்டு முறை தவறவிட்டு இருக்கிறது. அதற்குக் காரணம் திமுகதான். வரும் காலத்தில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 25 தொகுதிகளில் வெற்றி இலக்கு என வைத்து அனைத்துத் தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்து வலுப்படுத்த வேண்டும்” என்று பேசி இருந்தார்.

இந்த நிலையில் இன்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை சபாநாயகருமான தம்பிதுரை கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “வேலூர் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வரவேண்டும் என பேசியது தமிழகத்துக்கு வரவேண்டிய பெருமை. கடந்த காலத்தில் இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பு ராஜாஜி, காமராஜர் மற்றும் மூப்பனாருக்குக் கிடைக்க வேண்டியது தள்ளிப்போனது. அதற்குக் காரணம் திமுக என அமித்ஷா குறிப்பிட்டுள்ளார். அதிமுக, பாஜக கூட்டணியில் உள்ளது. ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று முன்னாள் முதலமைச்சர், அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் பெயர் வைத்தார். அதிமுக நாடு முழுவதும் பரவ வேண்டும். ஒரு தமிழன் இந்தியாவை ஆளுகின்ற வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்கிற அடிப்படையில்தான் அந்தப் பெயர் வைத்தார் எம்ஜிஆர். அதற்கேற்ப மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் பிரதமராகும் வாய்ப்பு வந்தது. காலத்தின் கட்டாயத்தால் அது மாறிவிட்டது.

தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து வருகிறோம். தமிழகத்தைச் சேர்ந்த யாராவது பிரதமராக வருவார்களா எனும் எண்ணம் மக்களிடம் உள்ளது. உலக அளவில் மாபெரும் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். ‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் மோடி’ என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திக்கும் கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெறுவது அதிமுகவின் குறிக்கோள். தமிழர் ஒருவர் பிரதமராக வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்தை வரவேற்கிறோம். அமித்ஷா தெரிவித்த வார்த்தையை செயல்படுத்துவார் என்கிற நம்பிக்கை உள்ளது. இந்தத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் மோடி என சொல்லிவிட்டார். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எப்போது பிரதமராக வருவார் என தெரியவில்லை. அப்படி வரும் பட்சத்தில் அதிமுக எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த எண்ணத்தை செயல்படுத்தக்கூடிய இடத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமிதான் பிரதமர் வேட்பாளராக வர வேண்டும். எடப்பாடி பழனிசாமி எளிமையானவர், விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர். நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். ஜெயலலிதாவின் ஆசி பெற்றவர். அவருக்கு பிரதமராக அனைத்து தகுதிகளும் உள்ளன.

மத்திய ஆட்சியில் 18 ஆண்டுகாலம் திமுக கூட்டணியில் இருந்தது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தன் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அப்போது ஏன் அதை திமுக தடுக்கவில்லை. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் திமுக ஐந்து ஆண்டுகள் கூட்டணியில் இருந்தது. அப்போது மத்திய அரசின் திட்டங்கள் என்னென்ன வந்தது என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிடட்டும். அதன் பிறகு பாஜக ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைக் கூறுகிறோம். மாநில சுயாட்சி என மு.க.ஸ்டாலின் பேசுவது வெறும் கண் துடைப்பு. கல்வித் துறையின் அனைத்து அதிகாரமும் சென்றதற்கு திமுகதான் காரணம். நீட் தேர்வு நடத்துவது மத்திய அரசு. அதன் கலந்தாய்வை மத்திய அரசுதானே நடத்த வேண்டும். நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் அதிமுகவின் கொள்கையும். மாநில அரசின் உரிமைகளை விட்டுக்கொடுத்தது திமுகதான். என்னுடைய தனிப்பட்ட கருத்து மாநில சுயாட்சிகளை விட்டுக் கொடுக்கக் கூடாது. நீட் தேர்வு கூடாது” என்று அவர் பேசி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com