'பள்ளிக்கூடம்' எனக்குத் தமிழக அரசின் சிறந்த இயக்குநர் விருது பெற்று தந்தது!

இயக்குநர் தங்கர் பச்சான் நெகிழ்ச்சி!
Pallikudam movie
Pallikudam movie

பள்ளிக்கூடம் திரைப்படம் 2007ஆவது ஆண்டில் தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த, நரேன், சினேகா, ஷ்ரேயா ரெட்டி, சீமான் இவர்களுடன், இப்படத்தை இயக்கிய தங்கர் பச்சானும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் கதையானது, 1978, 1983, 1991, 2004 ஆகிய நான்கு காலகட்டங்களில் நடப்பவையாக இருந்தது.

தான் இயக்கிய ‘பள்ளிக்கூடம்’ திரைப்படம் வெளியாகிப் பதினைந்து ஆண்டுகள் ஆனதையொட்டி இயக்குநர் தங்கர் பச்சான் நெகிழ்ச்சியுடன் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

“அனைவருக்குமான பள்ளிக்கூடத்தை நினைவூட்டி, படம் பார்த்தவர்கள் அனைவரின் மனதிலும் குடி கொண்ட திரைப்படம் பள்ளிக்கூடம். 15 ஆண்டுகள் கடந்த பின்பும் அடிக்கடி நினைவு கூறும் படமாகவும் அமைந்தது. அந்நாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் படத்தைக் கண்டு களித்தார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கையின் படி தமிழகம் முழுவதுமான அனைத்து பள்ளிகளுக்கும் திரையிட்டுக் காண்பிக்கத் தீர்மானம் நிறைவேற்றி, அதன்படி காண்பிக்கப்பட்டது. அரசு வரிச் சலுகை வழங்கி, மக்களை ஊக்கப்படுத்தியது.

இப்பொழுதும் இந்தத் தலைமுறையினரும் காணும் படமாக உள்ளது. அரசுப் பள்ளிகளை மூடாமல் தற்காத்துக்கொள்ள முயற்சிக்கும் தமிழக அரசு இப்பொழுது நினைத்தால்கூட அதே போன்று அனைத்துப் பள்ளி மாணவர்களும் காண ஆணை பிறப்பிக்கலாம்.

இப்படத்திற்குப் பின்னர் தான் முன்னாள் மாணவர் சங்கங்கள் முழு மூச்சுடன் இயங்கத் தொடங்கின. உலகின் மூலை முடுக்கில் உள்ளவர்கள் எல்லாம் தம்மை உருவாக்கிய பள்ளிக்கூடங்களைப் புனரமைத்துப் புதுப்பிக்க நன்கொடைகளை வாரி வழங்கினார்கள். அரசுப் பள்ளிகள் பொலிவு பெற்றன. எனக்குத் தமிழக அரசின் சிறந்த இயக்குநர் விருதும் கிடைத்தது.” `15 ஆண்டுகள் கடந்த பின்பும் அடிக்கடி நினைவுகூரும் படமாக அமைந்தது `பள்ளிக்கூடம்' என்று இயக்குநர் தங்சர் பச்சான் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com