நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பு மசோதா நிறைவேற்றம்!

நரிக்குறவர்களை  பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பு மசோதா நிறைவேற்றம்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான அரசியல் சாசன திருத்த மசோதா, மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதாவை, பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜூன் முண்டா மக்களவையில் நேற்று முன்தினம் அறிமுகம் செய்தார். இந்த மசோதா மீது இன்று விவாதம் நடத்தப்பட்டது. விவாதத்திற்கு பிறகு இந்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.

நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இதையடுத்து, நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியது. மேலும், பழங்குடியினர் அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்டது.

இதற்கான அரசியல் சாசன சட்ட திருத்த மசோதாவை கடந்த 13ம் தேதி மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா மக்களவையில் அறிமுகம் செய்தார். இந்நிலையில், பழங்குடியினர் அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும், நரிக்குறவர் – குருவிக்காரர் சமூகத்தினருக்கும் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக இந்த மசோதா மீது பேசிய திமுக எம்.பி செந்தில் குமார், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் லம்பாடி உள்ளிட்ட பெயர்களில் உள்ளவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

logo
Kalki Online
kalkionline.com