பெண்ணாடம் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு பிரச்னை: தலைமைச் செயலருக்கு தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ்!

பெண்ணாடம் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு பிரச்னை: தலைமைச் செயலருக்கு தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ்!

கடலூர் மாவட்டத்தில் இருக்கிறது பெண்ணாடம் பேரூராட்சி. இங்கு, சுய உதவிக் குழு மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தார் தூய்மைப் பணியாளர் பாபு. இவர் கடந்த மே 19ம் தேதி கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்தபோது உடலில் அரிப்பு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், மே 25ம் தேதி அவர் உயிரிழந்தார். இந்த நிலையில், பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, கடந்த ஜூன் 7ம் தேதி தனது சமூகவலைதள பக்கத்தில், ‘மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12வது வார்டு உறுப்பினர் விஸ்வநாதன், மனித கழிவு கலந்த நீரில் தூய்மைப் பணியாளரை கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதன் காரணமாக, அந்தத் தூய்மைப் பணியாளர் இறந்து விட்டதாகவும், இந்த விஷயத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மவுனம் காக்கிறார்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியினர், ‘மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியே இல்லாத நிலையில், எஸ்.ஜி.சூர்யா அவதூறு பரப்புவதாக அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.

எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதுக்கு கண்டனம் தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எஸ்.ஜி.சூர்யா, இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. சமூகப் பிரச்னைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் இரட்டை வேட நிலைப்பாட்டை விமர்சித்ததற்காக எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்திருக்கிறார்கள். விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர் கருத்துகள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழகத்தில் நிலவுகிறது. கருத்து சுதந்திரத்தின் காவலர்கள்போல் தங்களைக் காட்டிக் கொண்டு, எதிர் குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது என்பதை திமுக அரசு நினைவில் கொள்ள வேண்டும். பாஜக தொண்டர்களை, இதுபோன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித்துக்கொண்டிருக்கும்’ என்று பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், பெண்ணாடம் பேரூராட்சி தூய்மைப் பணியாளர் பணியின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஆவணங்கள் சிலவற்றை அனுப்பக் கோரி, கடந்த 26ம் தேதி தலைமைச் செயலருக்கு தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், “கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் தூய்மைப் பணியாளர் உயிரிழந்த சம்பவத்தை தேசிய பட்டியலின ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு இருக்கிறது. அரசியல் சாசன சட்டப் பிரிவு 338ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த விசாரணையை ஆணையம் மேற்கொள்ள இருக்கிறது. அதனால், தாங்கள் இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் பிரதி, உயிரிழந்த நபரின் மருத்துவச் சிகிச்சை ஆவணங்களின் நகல்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகை விவரம் போன்ற குறிப்புகள் ஆகியவற்றை உடனடியாக தேசிய பட்டியலின ஆணையத்துக்கு அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். இவற்றைத் தாங்கள் நேரில் வந்தும் கொடுக்கலாம். இதை நீங்கள் அவசரப் பணியாகக் கருதும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த நோட்டீஸ் தமிழக தலைமைச் செயலர் தவிர, தமிழக டிஜிபி, கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும், இதன் நகல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அனுப்பப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com