தாய்லாந்தை சேர்ந்த தாய் ஸ்மைல் ஏர்வேஸ் விமானம் நேற்று பாங்காக்கில் இருந்து கொல்கத்தா நோக்கி வந்து கொண்டிருந்தபோது, ஒரு இந்தியப் பயணி நடைபாதையில் வைத்திருந்த பையை அவ்வழியாக சென்ற மற்றொரு பயணி மிதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில், இருவருக்கும் வாய்ச்சண்டை ஏறப்பட்டு பின்னர் கைகலப்பில் முடிந்தது.
இந்த விவகாரம் கைமீறி போனதுடன் சரமாரியாக ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அவரின் நண்பர்களும் சேர்ந்து கொண்டு மற்றொரு பயணியை சரமாரியாக தாக்கி உள்ளனர். சண்டையை நிறுத்த முயன்ற விமானப் பணிப் பெண்ணையும் திட்டி அனுப்பினர். இதையடுத்து விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர் அறிவிப்பையடுத்து சண்டை முடிவுக்கு வந்தது.
இப்படி நடுவானில் பறக்கும் விமானத்தில் பயணிகள் சண்டை போட்ட சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சண்டை குறித்து தாய் ஸ்மைல் ஏர்வேஸ் நிறுவனம் அறிக்கை எதையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.