
கோயம்புத்தூரைத் தொடர்ந்து சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல ஊர்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடந்தன. இதுபோன்ற கலவர சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது;
நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் இச்சோதனையின்போது 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இக்கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து 1,410 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். வாகனங்கள் மீது கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் பெட்ரோல் குண்டு வீச்சு மூலம் பல ஊர்களில் வீடுகள், வாகனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை குறிவைத்து வீசிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.இச்சம்பவங்கள் தொடர்பாக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இச்செயல்களில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக பிடிபட்ட குற்றவாளிகள் கைது செய்யட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை மாநகரில் RAF இரண்டு பிரிவுகள், மாநில கமாண்டோ படை இரண்டுபிரிவுகள், சிறப்பு அதிரடிப்படை இரண்டு பிரிவுகள் என கூடுதலாக 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர், தாமரைக்கண்ணன் அங்கு முகாமிட்டுள்ளார். எனவே, மாநிலத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள்.
-இவ்வாறு டிஜிபி சைலேந்திரபாபு தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.