நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் உறை பனியில் இருந்து செடிகளை பாதுகாக்க மலர்ச் செடிகளுக்கு பிளாஸ்டிக் போர்வை போர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் கடும் உறை பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. நேற்று 2.9 டிகிரி செல்சியஸ் பதிவானது. பனியின் தாக்கம் அதிகம் இருப்பதால், மலர் நாற்றுகளை பாதுகாக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா தாழ்வான பகுதியில் இருப்பதால் இங்கு பனியின் தாக்கம் எப்போதும் சற்று அதிகமாக காணப்படும்.
பனியில் அலங்கார தாவரங்கள் மற்றும் மலர் நாற்றுகள் கருகாமல் இருப்பதற்கு தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் காலை, மாலை நேரங்களில் தண்ணீர் தெளித்து மலர்ச் செடிகள் பனியில் கருகாமல் காத்து வருகின்றனர். அத்துடன் பூங்காவில் இருக்கும் புல் மைதானங்களும் கருகாமல் இருப்பதற்கு 'பாப் அப்' ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
தொட்டிகளில் பராமரிக்கப்படும் மலர் நாற்றுகள் கருகக்கூடிய வாய்ப்புள்ளது. இதனால், பூங்கா புல் தரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள, மலர் நாற்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதுடன் 'பிளாஸ்டிக்' போர்வையை கொண்டு மூடி பாதுகாக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக நீலகிரி மாவட்டத்தில் கடும் உறை பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. கோடை சீசனில் மலர் கண்காட்சிக்காக அரசு தாவரவியல் பூங்கா, ரோஜாப் பூங்கா, தேயிலைப் பூங்கா உட்பட மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்கா மற்றும் நர்சரிகளில் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் செடிகள் கருகாமல் இருப்பதற்காக பிளாஸ்டிக் போர்வையைக் கொண்டு ஊழியர்கள் தாவரங்களையும், மலர் செடிகளையும் மறைத்து வருகின்றனர்.