இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் 10 கோடி(100 மில்லியன்) பேர் பின்தொடர்பவர்களைக் கொண்ட முதல் அரசியல்வாதி என்ற வரலாற்று சாதனையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார்.
தற்போதைய தொழில்நுட்ப காலத்தில், மக்களின் அன்றாட வாழ்வில் சமூக வலைதளத்தின் பயன்பாடு ஒரு முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. 2014 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்த பிரதமர் மோடி, அதில் தொடர்ந்து சுறுசுறுப்பாக (Active) இருந்து வருகிறார்.
உலக நாடுகளின் தலைவர்களிலேயே அதிகமான பின்தொடர்பவர்களைக் (Followers) கொண்டிருப்பது ஒரு மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.மோடி இந்த தளத்தை தனது பயணம், உலகத் தலைவர்களுடனான சந்திப்புகள், விழா வாழ்த்துக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளைப் பகிர பயன்படுத்துகிறார்.
உலக அளவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 43.2 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்தோ 15 மில்லியனும், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா 14.4 மில்லியனும், துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன் 11.6 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் உள்ளனர். அந்த வகையில் உலக நாடுகளின் தலைவர்களுடன் ஒப்பிடும்போது பிரதமர் மோடிக்கு அதிக instagram பின்தொடர்பவர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலும் மற்ற அரசியல்வாதிகளை விட பிரதமர் மோடியையே அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இரண்டாவது இடத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 16.1 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் களத்தில் உள்ளார். அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் எம்.பி.யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் 12.6 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் இருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் 10 கோடி(100 மில்லியன்) ஃபாலோயர்ஸ் கொண்ட பிரதமர் மோடியின் இந்த சாதனை சமூக ஊடகங்களில் இந்தியப் பிரதமரின் வலுவான டிஜிட்டல் இருப்பு மற்றும் உலகளாவிய பிரபலத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் உள்ளது.