

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள வேளையில் , அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக பிரிந்துள்ளது. அன்புமணி தலைமையிலான பாமகவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது , மேலும் கட்சியின் சின்னம் மாம்பழத்தையும் அவர்களுக்கே ஒதுக்கி உள்ளது. கட்சியின் நிர்வாகிகள் இரண்டு புறமாக பிரிந்து இருந்தாலும் சின்னத்தின் காரணமாக , அன்புமணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து விட்டதால், அன்புமணிக்கு எதிரான அரசியலில் ஈடுபட்டு வரும் அவரது தந்தை மருத்துவர் ராமதாஸ் , திமுக கூட்டணியுடன் இணைவதற்கு பேச்சுவார்த்தைகளை நடத்தினார். ஆனால் , ராமதாஸ் தலைமையிலான பாமகவை திமுக கூட்டணிக்குள் சேர்க்கக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முட்டுக்கட்டை போட்டார். இதைத் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்றாலும் திமுக கூட்டணியில் இணைக்க வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாமக அதிகாரப்பூர்வமாக அன்புமணி கைகளை சென்று விட்டதால் , ஐயா பாமக என்ற புதிய கட்சியை ராமதாஸ் தொடங்குவார் என்று தகவல்கள் வெளியனா வண்ணம் இருந்தன. திமுக கூட்டணிக்கு எந்த ஒரு முடிவும் தெரியாததால், ராமதாஸ் தரப்பினர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகளை நடத்தினர். கூட்டணி என்றால் , காங்கிரஸ் உடன் மற்ற கட்சிகள் வந்தால் கூட்டணி வைக்கலாம் என்றும் , தனியாக ஒன்று இரண்டு மாநில கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று விஜய் முடிவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தவெக கூட்டணியில் அமமுக , தேமுதிக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பிரிவு ஆகியோர் இணைவார்கள் என்று பேச்சுவார்த்தை நடத்துவிட்டு, அவர்கள் வேறு அணிக்குத் தாவியுள்ளதால் விஜயும் அப்செட்டில் இருக்கிறார். விஜயும் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தன்னைக் காட்டி பேரம் பேச மட்டும் பயன்படுத்திக் கொள்வதாக வருத்தத்தில் இருக்கிறார். இறுதியாக சசிகலா தொடங்க இருக்க உள்ள கட்சியுடன் ராமதாஸ் கூட்டணி வைக்க இருப்பதாக தகவல்களும் வெளியான வண்ணம் இருந்தது.
இந்நிலையில் ராமதாஸ் பிரிவை சேர்ந்த எம்எல்ஏ அருள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை ரகசியமாக சந்தித்து பேசியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அருளின் இந்த சந்திப்பு ,அவரது பிரிவு கௌரவ தலைவர் ஜிகே.மணிக்கு தெரியாது என்று கூறப்படுகிறது. அப்போது செய்தியாளர்கள் அருளிடம் எடப்பாடி பழனிச்சாமி உடனான சந்திப்பை பற்றி கேள்வி கேட்டபோது , எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவியில் இருந்தவர் எங்கள் ஊர் காரர் அதனால் சந்தித்து பேசினேன் என்று கூறினார்.
பத்திரிக்கையாளர்களின் மத்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் "கோவிலுக்கு செல்கிறேன்" என்று கூறி பதிலளிக்க மறுத்துவிட்டார். அதன் பின்னர் இருவரும் கூட்டாக சேர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர். அப்போது கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக அருள் தெரிவித்திருந்தார். அவர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்ததும் , அதன் பின்னணியில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து பேசியதும் பலரது கவனத்தை பெற்றுள்ளது. அருள் கூட்டணி தொடர்பாக பேசினாரா? ஏற்கனவே அதிமுக கூட்டணியில் அன்புமணி இருப்பதால் , அதிமுகவில் சேர பேச்சுவார்த்தை நடத்தினாரா? என்று கேள்விகள் எழுகின்றன.