காவல்துறையினர் குவிப்பு..!! பெரும் பரபரப்பு...

காவல்துறையினர் குவிப்பு..!! பெரும் பரபரப்பு...
Published on

சசிகலா புஷ்பா வீட்டில் கல்வீசி தாக்குதல்..!!

தூத்துக்குடி மாவட்டம் தபால் தந்தி காலனி 8ஆவது தெருவில் வசித்து வருகிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா. பா.ஜ.க. நிர்வாகியான இவரது வீட்டை மர்ம நபர்கள் கடுமையாக கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜன்னல் கதவுகளை உடைத்து எறிந்து, வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியுள்ளனர்.

தூத்துக்குடியில் வசித்து வரும் சசிகலா புஷ்பா, அ.தி.மு.க.வில் இருக்கும்போது எம்.பி.யாக பதவி வகித்து வந்தார். கருத்துவேறுபாடு காரணமாக அ.தி.மு.க.வில் இருந்து விலகி இப்போது பி.ஜே.பி.யில் இருக்கிறார். இவரது இல்லத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கல்வீச்சு தாக்குதல் சம்பவத்தை அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கும் காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், ஆட்டோக்களில் வந்து இறங்கிய சில பெண்கள் உட்பட பலர் கல் எரிந்து தாக்குதல் நடத்திவிட்டு சென்றதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

இதனால், அப்பகுதியில் பதற்றம் காணப்படுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சசிகலா புஷ்பா தற்போது நாகர்கோவில் கூட்டத்திற்கு சென்றுள்ளார். அதனால் அவர் வீடு பூட்டப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சிலர் வீட்டை சேதப்படுத்தியுள்ளனர்.

முன்னதாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று பா.ஜ.க. தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. விழாவில் மாபெரும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் மாநிலத் துணைத் தலைவரான சசிகலா புஷ்பா கலந்து கொண்டு பேசுகையில்,

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 24 மணி நேரமும் மக்களுக்காக சிந்தித்துக் கொண்டும் உழைத்துக் கொண்டும் இருக்கிறார். அவரைப் பற்றி பேசும் தகுதி இங்கு யாருக்கும் இல்லை. ‘மரியாதையாக பேச வேண்டும்’ என்று சொல்லிக் கொடுத்த பண்பு பா.ஜ.க.வுக்கு இருக்கிறது. ஒருமையில் பேசும் பழக்கம் பா.ஜ.க.வுக்கு இல்லை என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தி.மு.க. அமைச்சர் கீதாஜீவன் “அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கும் போது மேடையில் ஏறுவோம்“ என்று ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சசிகலா புஷ்பா, “நீங்கள் வீட்டிலிருந்து வெளியே வரும்போது கால் இருக்காது, நாக்கு இருக்காது” என்று ஆவேசமாக கூறினார்.

இந்நிலையில் சசிகலா புஷ்பாவின் வீட்டை கல்வீசி தாக்குதல் நடத்தியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com