தேசிய கீதத்தை அவமதித்த போலீஸ் எஸ்.ஐ. சஸ்பெண்ட்!

தேசிய கீதத்தை அவமதித்த போலீஸ் எஸ்.ஐ. சஸ்பெண்ட்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

நாமக்கல் மாவட்டம், பொம்மைக்குட்டைமேட்டில் கடந்த 28ம் தேதி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதோடு, புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டியும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி.

இந்த விழாவை ஒட்டி அந்த இடத்திலும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விழாவின் நிறைவில் மேடையில் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது அங்கு குழுமியிருந்த அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதத்துக்கு மரியாதை செய்து கொண்டிருக்கையில், அந்த விழாவின் கடைசிப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் என்பவர் மட்டும் எழுந்து நின்று தேசிய கீதத்துக்கு மரியாதை செய்யாமல் தனது இருக்கையிலேயே அமர்ந்து கொண்டு செல்போன் பேசியபடி இருந்தார். போலீஸ்காரரின் இந்த அவமரியாதை வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாக வைரல் ஆனது.

தேசிய கீதம் பாடப்படும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்வது நம் நாட்டுக்கு நாம் செலுத்தும் மரியாதையும் கடமையும் ஆகும். தேசிய கீதத்துக்கு இழைக்கப்பட்ட இந்த அவமரியாதைத் தகவலை அறிந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கலைச்செல்வன், சிறப்பு உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசத்தை இன்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com