
மஹந்த் பாலக்நாத் யோகி ஒரு அரசியல்வாதி, ராஜஸ்தான் மாநிலம், டிஜாரா சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ. பாபா மஸ்த்நாத் பல்கலைக்கழகத்தின் வேந்தர். ஹிந்துக்களின் நாத் பிரிவினரின் 8-வது மஹந்த். கடந்த 2016 ஆம் ஆண்டுதான் மஹந்த் சந்த்நாத், பாலக்நாத் யோகியை தனது வாரிசாக அறிவித்தார். இந்நிகழ்வில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாபா ராம்தேவ் கலந்துகொண்டனர்.
ராஜஸ்தானில், பெஹ்ரோர் என்னுமிடத்தில் உள்ள கோஹ்ரானா கிராமத்தில் பாலக்நாத் பிறந்தார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பாலக்நாத் ஆறரை வயது இருக்கும்போது சன்யாசம் பெற்று வீட்டை விட்டு வெளியேறி ஆசிரமத்தில் வளர்ந்தார்.
இளம் வயதில் பாபா கேதன்நாத், இவரை குருமுக் என்று அழைத்தார். 1985 முதல் 1991 ஆம் ஆண்டுவரை மச்சேந்திர மஹராஜ் ஆசிரமத்தில் வளர்ந்து வந்தார். அதன்பின் அவர், ஹனுமன்கர் மாவட்டத்தில் நாதவாலி கிராமத்தில் ஒரு மடத்தில் மஹ்ந்த் சந்த்நாத் கீழ் வளர்ந்து வந்தார்.
மஹந்த் பாலக் நாத் யோகி அரசியலில் நுழையக் காரணமாக இருந்தவர் அவரது குரு மஹ்ந்த சந்த்நாத். இவர் ஆல்வார் தொகுதி எம்.பி.யாக இருந்தவர். குருவின் வழியை பின்பற்றி வந்த பாலக்நாத், ஹரியாணாவில் பாபா மஸ்த்நாத் மடத்தின் தலைவரானார். யோகா குரு பாபா ராம் தேவின் முழு ஆதரவு பெற்றவர் பாலக் நாத்.
2019 ஆம் ஆண்டு ஆல்வார் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிட்ட பாலக்நாத், தம்மை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பன்வர் ஜிதேந்திர சிங்கை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
2023 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் டிஜாரா தொகுதியில் போட்டியிட்டு வென்ற பாலக்நாத், கடந்த டிச. 7 ஆம் தேதி எம்.பி. பதவியை ராஜிநாமாச் செய்தார். ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியை குறிவைக்கும் போட்டியாளர்களில் பாலக்நாத்தும் ஒருவர்.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 199 இடங்களில் பா.ஜ.க. 115 இடங்களில் அமோக வெற்றிபெற்றது. இந்த நிலையில் முதல்வரைத் தேர்வு செய்யும் முயற்சியில் கட்சி மேலிடம் ஈடுபட்டுள்ளது.
ராஜஸ்தான் தேர்தலில் பா.ஜ.க. எவரையும் முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தவில்லை. முதல்வர் பதவியை எட்டிப் பிடிக்க போவது யார் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் அரசியல் வட்டாரத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் ஆல்வார், தொகுதி எம்.பி.யான பாபா பாலக்நாத் அதிக கவனம் பெற்றுள்ளார். மாநில முதல்வராக அவர் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்த தேர்தல் வெற்றி எல்லாமே மோடியின் வழிகாட்டுதல்படிதான் கிடைத்தது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், எனது மூத்த சகோதரரைப் போன்றவர் என்கிறார். நீங்கள் ராஜஸ்தான் முதல்வர் ஆகலாம் என பேசப்படுகிறே என கேட்டதற்கு, “பொது வாழ்வுக்காக நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டுவிட்டேன். கட்சிக்கும், மக்களுக்கும் சேவை செய்வதே எனது வேலை என்கிறார்.