தமிழ்நாட்டு மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குரியது” என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மும்பை ஐஐடி மாணவரின் மரணத்திற்கு இடதுசாரி மாணவ அமைப்பினர்தான் காரணம் என்று ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினர் கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களும் பாதிக்கப்பட்டதோடு, பலர் காயமடைந்தனர். மேலும் அந்த தாக்குதலில் மாணவர்கள் வைத்திருந்த பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற தலைவர்களின் உருவப்படங்களையும் உடைத்து சிதைத்து உள்ளதாக தெரிகிறது.

கடந்த 12-ஆம் தேதி மும்பை ஐஐடியில் மர்ம மரணம் அடைந்த தர்ஷன் சொலான்கி என்கிற தலித் மாணவருக்கு நீதி கேட்டு இடதுசாரி மாணவர் அமைப்பினர், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று ஊர்வலம் சென்றனர். அந்த ஊர்வல த்தில் பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் போன்ற தலைவர்களின் படங்களை எடுத்துச் சென்று உயிரிழந்த மாணவருக்காக நீதி கேட்டனர். அப்போது தான் இந்த தாக்குதல்கள் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கோழைத்தனமானது.”பெரியார், கார்ல் மார்க்ஸ் படங்களை ஏபிவிபி அமைப்பினர் சேதப்படுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பல்கலைக்கழகங்கள் கற்றலுக்கான இடங்கள் மட்டுமல்ல, விவாதம் மற்றும் கருத்து பரிமாற்றங்களுக்கான இடமும்தான் என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக மாணவர்களை பாதுகாக்கவும் வலியுறுத்தியுள்ளார். அதேபோல் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை நல்லதல்ல என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com