அஜித் பவாரின் அடுத்தடுத்த அரசியல் அதிரடி - மௌனத்தில் பா.ஜ.க, கோபத்தில் ஷிண்டே - மகாராஷ்டிர அரசு கவிழுமா?
எதிர்க்கட்சித் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவருமான அஜித் பவார், மகாராஷ்டிர அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடத்தில் இருப்பதாக மும்பை வட்டாரத்து செய்திகள் தெரிவிக்கின்றன. தனது மாமனார் சரத் பவார் ஆதரவுடன், அடுத்தடுத்து அரசியல் நகர்வுகளை அஜித் பவார் ஆரம்பித்து வைத்திருக்கிறார். இது சிவசேனா - பா.ஜ.க கூட்டணி அரசில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
2019ல் நடந்ததை 2023ல் மறுபடியும் நடத்திக்காட்ட அஜித் பவார் முயற்சியெடுப்பதாக மும்பை பத்திரிக்கைள் செய்தி வெளியிட்டன. இதை அஜித் பவார் மட்டுமல்ல ஷரத் பவாரும் மறுத்திருக்கிறார். பா.ஜ.கவுடன் கூட்டணி அமைப்பதில் தனக்கு உடன்பாடில்லை என்பதை ஷரத் பவார் பலமுறை தெரிவித்திருக்கிறார். ஆனாலும், மறைமுகமாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரத்தில் செய்திகள் உலா வருகின்றன.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.கவுடன் புதிய கூட்டணி அமைக்கவுள்ளதாக செய்திகள் வந்தவுடன் ஆளும் சிவசேனா அரசு பதறிவிட்டது. எந்த எம்.எல்.ஏக்களுடன் பேசவில்லை. யாரிடமும் உடன்பாடில்லை என்றெல்லாம் விளக்கம் தந்து அஜித் பவார் மறுத்து வருகிறார். இந்நிலையில் ஒருவேளை அஜித் பவார் அதிரடி முடிவெடுத்தால் பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று சிவசேனா தெரிவித்திருக்கிறது.
ஏற்கனவே சிவசேனாவை இரண்டாக பிளந்துதான் பா.ஜ.க ஒரு புதிய கூட்டணி அரசை அமைத்திருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் பா.ஜ.கவின் பார்வை தேசியவாத காங்கிரஸ் கட்சி பக்கம் சென்றிருப்பதாக சிவசேனா அதிருப்தியாளர்கள் செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக விளக்கம் அளித்த ஆளும் கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஷிர்சாட், அஜித் பவார் தேசியவாத காங்கிரசில் இருந்து விலகி சிவசேனா மற்றும் பா.ஜனதாவின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டால் அவரை வரவேற்போம். அதே நேரத்தில் தனி அணியாக பா.ஜ.கவுடன் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்க முயற்சியெடுத்தால் அதை எதிர்ப்போம். அப்படியொரு சம்பவம் நடந்தால் கூட்டணி அரசிலிருந்து வெளியேறுவோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
எங்களுடைய கொள்கை தெளிவானது. தேசியவாத காங்கிரஸ் துரோகத்தின் கட்சி. அதோடு எந்நாளும் கூட்டணி சேரமாட்டோம். பா.ஜ,கவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி சேர்ந்தால் மராட்டிய மக்கள் விரும்பமாட்டார்கள். காங்கிரஸ்,
தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்தது பிடிக்கவில்லை என்பதால் எதிர்ப்புகள் எழுந்தன. முன்பு சிவசேனாவில் நிலவி வந்தது போல தற்போது தேசியவாத காங்கிரசில் குழப்பம் நிலவி வருகிறது என்றார்.
அஜித் பவார், உத்தவ் தாக்கரேவோடு கூட்டணி சேர விரும்பவில்லை. அஜித் பவாருக்கு அவரது கட்சி மீதுள்ள அதிருப்தியை வெளிக்கட்ட ஏதாவது அதிரடி நடவடிக்கைகளை செய்யக்கூடியவர்தான் என்றவர், அவரது மகன் பார்த் பவார் தேர்தலில் தோற்றதில் இருந்து ஒட்டுமொத்த கட்சியும் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் விமர்சனம் செய்திருக்கிறார்.
அஜித் பவார் அனைத்தையும் மறுத்து வந்தாலும், மகாராஷ்டிர பா.ஜ.க கட்சி தொடர்ந்து மௌனம் சாதிக்கிறது. அதுதான் ஆளும் சிவசேனா கட்சியை பதட்டத்தில் வைத்திருக்கிறது.