ஸ்கூல் பசங்களுக்கு சொல்வது போல் அண்ணாமலை பாடமெடுக்கிறார்... சும்மா விட்டுடுவோமா? உதயநிதி ஸ்டாலின் ஓப்பன் டாக்!
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தி.மு.க. நிர்வாகிகளின் சொத்துப் பட்டியலை வெளியிட்டதைத் தொடர்ந்து இரு தரப்பும் கடுமையான மோதல் போக்கை கையாளுகின்றன. ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்டு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். பதிலுக்கு ரூ.501 கோடி நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலையும் ஒரு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க நிர்வாகிகளுக்கு எதிராக அவதூறு பரப்பி வரும் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக ஆர்.எஸ்.பாரதி அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸ் பற்றி விரிவான அறிக்கையின் மூலம் விளக்கமளித்துள்ள பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அடுத்த கட்ட நடவடிக்கையை விவரித்திருக்கிறார். சென்னை மெட்ரோ ரயிலில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
பா.ஜ.க தரப்பிடம் உள்ள ஆதாரங்களை சி.பி.ஐ வசம் வெகு விரையில் அளிக்க இருக்கிறோம். அதைத் தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை ஆரம்பமாகும். நேரில் ஆஜராகும்படி சி.பி.ஐயிடமிருந்து சம்மன் வரும்வரை ஆர்.எஸ்,பாரதி பொறுமையாக காத்திருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
தி.மு.க நிர்வாகிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆர்.எஸ்.பாரதி ஏன் பதிலளிக்கிறார் என்பது தெரியவில்லை. முன்னுக்குப் பின் முரணான கருத்துகளையே தெரிவித்து வருகிறார். நோபல் ஸ்டீல் நிறுவனத்திடம் எந்த ஒப்பந்தமும் கையெழுத்து இடப்படவில்லை என்று சொல்லியிருந்தார். நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்துக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இன்னொரு இடத்தில் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தரவேண்டிய விளக்கத்தை ஏன் ஆர்.எஸ்.பாரதி தரவேண்டும் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அண்ணாமலை யின் அறிக்கை குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். நேற்று சென்னையில் ஒரு நிகழ்வில் பங்கேற்றுவிட்டு வெளியே வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்துகொண்டு கேள்வி எழுப்பினார்கள்.
தி.மு.க நிர்வாகிகள் மீது அண்ணாமலை தந்துள்ள சொத்துப் பட்டியல் பற்றியும்ட அவரது அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஸ்கூல் பசங்களுக்கு கிளாஸ் எடுப்பது போல் உங்களுக்கு கிளாஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவரிடம்
போய் நீங்கள் கேள்வி கேட்பீங்களா என்று பத்திரிக்கையாளர்களிடம் திருப்பிக் கேட்டார்
அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டுகள் பற்றி ஏற்கனவே விளக்கம் அளித்திருக்கிறோம். நிச்சயமாக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும். சும்மா விட்டுவிடுவோமா? என்றும் தெரிவித்திருக்கிறார். ஆக, தி.மு.கவுக்கு பா.ஜ.கவுக்கும் இடையேயான அரசியல் மோதல், அண்ணாமலைக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையேயான சட்டப் போராட்டமாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.