
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக அரசியலில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் நடவடிக்கை பெருமளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சென்னையில் நடந்த பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை "அதிமுகவுடனான கூட்டணியில் பாஜக தொடர்ந்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன்" எனக் குறிப்பிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அண்ணாமலையின் இந்த கருத்தில், அவருக்கும், தமிழக பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு தகவல்கள், புகார்கள் டெல்லி தலைமைக்கு வந்துள்ளன. இதற்கிடையே நேற்று டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநில பா.ஜனதா தலைவர்கள் மாற்றப்பட்டனர். அண்ணாமலை மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் அது குறித்து ஏதும் தகவல்கள் வரவில்லை.
தமிழக அரசியலில் அதிமுக-பாஜக கூட்டணி இடையே கடந்த சில நாட்களாக பனிப்போர் நடந்து வருகிறது. பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தார். இதைத்தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட பாஜக தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த பாஜகவினர் தொடர்ந்து அதிமுகவில் இணைந்தனர்.
,
இந்த பரபரப்பான அரசியல் களத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று அவசரமாக டெல்லி புறப்பட்டார். அங்கு தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரடியாக சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை ஈடுபட்டுள்ளார். " அதிமுக பாஜக கூட்டணி தொடர வேண்டாம்" என்று தன்னுடைய நிலைப்பாட்டை அமித்ஷாவிடம் எடுத்துரைத்ததாக தகவல்கள் வருகிறது.
அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் வருங்காலத்தில் பாஜக நினைத்த அளவிற்கு வளர முடியாது கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணி முடிவை உரிய நேரத்தில் பாராளுமன்ற தேர்தல் குழுவில் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் எனவும் அமித்ஷா கூறியதாக கூறப்படுகிறது.